VIBE பண்ணுங்கடா

Advertisement

குற்றப்பரம்பரை – நாவல் விமர்சனம்


வேல ராமமூர்த்தி அவர்கள் எழுதிய குற்றப்பரம்பரை நாவலை பல பரிமாணங்களில் ஆய்ந்திட முடியும் –  ஆங்கிலேயர்களின் ஒடுக்குமுறைகளை விமர்சிக்கும் ஒரு சரித்திரம் தழுவிய நாவலாக, ஒரு சாதியின் வரலாற்று பதிவாக, சாதிச்சண்டைகளை சுயலாபத்திற்காக மூட்டிவிடும் சில கொடிய மக்களின் விமர்சனமாக, வைரங்களைத் தேடி அலையும் ஒரு மந்திரவாதியின் கதையாக, பிறப்பிற்கும் வளர்ப்பிக்கும் இடையே ஊஞ்சலாடும் தவிப்பின் பதிவாக – இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த நாவலின் சிறப்பம்சம், வீழ்ச்சி இரண்டும் ஒன்றே – ஒரே நாவல் பல விஷயங்களை தன்னில் அடக்க முயற்சித்தது.

இந்த விமர்சனம் ஒரு பரிமாணம் பற்றியது மட்டுமே. கதை சொல்லும் நாவலாக எப்படி இருக்கிறது குற்றப்பரம்பரை?

1920 களில் நடக்கும் இந்த கதையில், கள்ளர் இனத்தின் பழக்க வழக்கங்களையும், அவர்கள் படும் இன்னல்களையும் வேயன்னா மற்றும் அவரின் கொம்பூதி கூட்டத்தின் மூலம் மிக அருமையாக பதிவு செய்கிறார் வேல ராமமூர்த்தி.

வேயன்னா, சேது, வையத்துரை போன்ற கதாபாத்திரங்களின் படைப்பு மிகவும் ரசிக்கும்படியாக உள்ளன. கதை நெடுகே கள்ளரின் வாழ்வியலை மிக உன்னிப்பாக பிரதிபலிக்கும் வண்ணமும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.

சில சிறப்பம்சங்கள் இருந்தும், முழு நாவலாக பார்த்தால் குற்றப்பரம்பரை சற்றே ஏமாற்றத்தை தருகிறது. திரைப்படமாகும் செய்திகள் மூலம் இந்த நாவல் பிரபலமடைந்தது இதற்கு பெரிய காரணம்.

வஜ்ராயினி எனும் பாத்திரத்தின் கிளைக்கதை மூலக்கதையுடன் கொஞ்சமும் பொருந்வில்லை. ஒரு இடத்தில் நடக்கும் சம்பவங்கள் முடியும் முன்னரே வேறெங்கோ பயணிக்கும் கதைப்போக்கு நடையை இடையிடையே தாமதிக்கச் செய்கிறது. 

வேறு இடத்தில் வளர்ந்து திரும்பும் வேயன்னாவின் மகன் சேது தன் பணிக்கும் பாசத்திற்கும் இடையே படும் மன உளைச்சலை ஓர் உவமையாக இன்னும் விரிவாக மெருகேற்றி இருக்கலாம்.

கதை நெடுக போடப்பட்ட பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் சற்றே அவசர கதியாக முடிகிறது இந்த நாவல்.

குற்றப்பரம்பரை நாவல் பிரபலமான அளவிற்கு அதன் கதை ஈடு குடுக்கவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

தருமியும் சொக்கனும்

தருமி மெல்ல நடந்தபடியே சொக்கனிடம் கேட்டான்…

“கனவுகளை வெறுப்பவன் யாரோ?”
“தூக்கம் இழந்தவன்.”

“பயம் இல்லாதவன் யார்?”
“மதி இழந்தவன்.”

“கவலைகள் இழந்தவன் யார்?”
“வயது இல்லாதவன்.”

தருமி சற்றே தாமதிக்க, சொக்கன் பெரிதாக நகைத்தான்.

தருமி தொடர்ந்தான்…

“தொடர்ந்தும் முடிவது?”

“வாழ்க்கையும் ஆன்மாவும்.”


“முடிந்ததும் தொடர்வது?”
“பசியும் பிரமஞ்சமும்.”

“சென்றும் திரும்புவது?”
“சூரியனும் சிரிப்பும்.”

“மொழியின் அழகு?”
“மௌனத்தில்.”

“கவிதையின் அழகு?”
“பொருளில்.”

“கதையின் அழகு?”
“முடிவில்.”


இருவரும் கைலாயம் நோக்கி நடந்தனர்.

அற்பச் சிதறல்

பிரபஞ்சம் படைத்த ஒருவனோ (ஒருத்தியோ)
வானும் மண்ணும்
கவியும் அழகும்
நதியும் கடலும்
தீட்டிக்கொண்டிருக்க…

இடை இடையே
வண்ணக் குழம்பில் நனைந்த தூரிகைக்கோல் உதற உதற
மாந்தர் முளைத்தனர்…
முளைத்துத் தழைத்தனர்…

வானும் மண்ணும் நமதே
கவியும் அழகும் நமக்கே
நதியும் கடலும் கூட நமதே
என கெக்கலித்து வழிந்தன

அழகிய சித்திரம் சிதைத்த
அற்பச் சிதறல் துளிகள்.

நிலம் பூத்து மலர்ந்த நாள் – நாவல் விமர்சனம்


மனோஜ் குரூர் அவர்களால் மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த நாவல், தமிழில் கே. வி. ஜெயஸ்ரீ அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.


சங்கத் தமிழ் இலக்கியம் பற்றியும் ஐந்திணை நிலபரப்புகள் பற்றியும் ஆன்லைன் தமிழ் பல்கலைகழகம் வலைதளத்தில் படித்து கொண்டிருந்தபோது, தற்செயலாக இந்த நாவல் பற்றி தெரியவந்தது.

எங்கு தேடியும் கிடைக்காமல் போக, கடைசியாக நாவலை வெளியிட்ட வம்சி புக்ஸ் அலுவலகத்தை தொலைபேசியில் அழைத்தேன். மிகத் துரிதமாக கூரியர் மூலம் அனுப்பி வைத்தார்கள்.


நாவலின் கதைக்களம் பதினேழு நூற்றாண்டுகள் முன்பான தமிழகம். சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் பெரும் ஆட்சி புரிகின்றனர். நன்னன், பாரி, அதியமான் போன்ற குறுநில மன்னர்கள் தங்கள் புகழ் பாடுவோற்க்கு பொன்னும் பொருளும் வழங்கும் வள்ளல்களாக பெருமை கொண்டுள்ளனர்.

இதை அறிந்த பாணரும் கூத்தரும்  மன்னர்களை பார்த்து தங்கள் வறுமையைப் போக்க குடும்பங்களுடன் புறப்படுகிறார்.

பல வருடங்கள் முன்பு ஓடிப்போன தன் மகன் மயிலனை எங்கோ சந்திக்கக்கூடும் என்ற நம்பிக்கையுடன் கொழும்பனும் அவனின் மற்ற பிள்ளைகளும் செல்கின்றனர்.

மூன்று பாகங்களாக விரியும் கதை, கொழும்பன், மகள் சித்திரை, மகன் மயிலன் என்று மூன்று கண்ணோட்டங்களில் சொல்லபடுகிறது.

மலைகளில் இருந்து நகரும் கூட்டம் வெவ்வேறு நிலப் பரப்புகளை கடக்கும்பொழுது அந்தந்த நிலத்தின் பூக்களும், வாசனைகளும், மரங்களும், மக்களும், சங்க இலக்கிய பாடல்களில் சொல்லப்பட்டது போல மிக அழகாக காட்சிப் படுத்துகிறார் மனோஜ்.

வேடர், உழவர், பரதவர் என பலதரப்பட்ட மக்களையும் அவர்களின் விருந்தோம்பல், உணவுகள், குடில்கள் மட்டுமின்றி அவர்கள் வழிபடும் கோவில்களும் இறைவிகளும் கூட கண்முன்னே வருகின்றன. ஏறுதழுவல், கூத்தாடல் போன்ற வழக்கங்கள் எல்லாம்  துல்லியமாக காட்சிப் படுத்தியது ஆச்சர்யமாக உள்ளது.

மன்னர்கள் மட்டுமின்றி ஔவை கபிலன் போன்ற பெரும்புழவர்களும் கதையில் பெரும்பங்கு வகிக்கும் கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.


அதிரடியாக படைகள் போர் செய்யும் சரித்திர நாவல்கள் மட்டுமே படித்துப் பழகிய என் போன்றவர்களுக்கு இந்த கதை சற்றே பொறுமையிலக்க செய்யும் என்பது உண்மையே. ஆனால், மன்னர்கள் மத்தியில் இன்றி மக்களின் மத்தியில், ஆடிப்பாடி, உண்டு, இளைப்பாறி நாமே சங்க தமிழ்நாட்டில் பயணம் செய்த களிப்பை வேறெந்த நாவெளிலும் நான் இதுவரை கண்டதில்லை. 

நாவலின் தலைப்பு போலவே கதையும், கடந்து செல்லும் நிலங்களும் கவிதையே.

தமிழ் நிலம் அன்றும் இன்றும் என்றும் கவிதையே!

ப்ராஜக்ட் ‘ஃ’ – நாவல் விமர்சனம்


கவா கம்ஸ் எழுதிய ப்ராஜக்ட் ‘ஃ’ நாவலை நான் படிக்கத் தொடங்கியது முற்றிலும் தற்செயலே. தமிழில் எழுதப்பட்ட அறிவியல் சிறுகதைகளை தேடி புத்தகக்கடைக்கு சென்றிருந்த போது தலைப்பை பார்த்து இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். ஆச்சர்யமூட்டும் கதைச்சுருக்கம், “விரைவில் வெள்ளித்திரையில்”, எழுத்தாளரின் விசித்திரமான புனைப்பெயர் என்று பல விஷயங்கள் கவர்ந்தன. உடனே வாங்கினேன். படித்தும் முடித்தேன்.

நாவலின் ஹீரோ அகில் மற்றும் அவன் நண்பர்கள் ஒரு புதையலை தேடி செல்கிறார்கள். அகிலின் தாத்தா அவனுக்கு விட்டுச்சென்ற தடயங்களும், மர்மமான செய்தியுடைய ஒரு கடிதம் மட்டுமே அவர்களிடம் உள்ளது. ஃபோனில் அவ்வபோது வரும் மர்ம நபர்களின் மிரட்டல்கள், ‘ழகரம்’ என்னும் ரகசிய அமைப்பின் ஆட்கள் என அகிலின் தேடல் சுவாரஸ்யமாகவே செல்கிறது.

புதையலை தேடி அகில் அண்ட் கோ செல்லும் இடங்கள் எல்லாம் மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ளது. சித்தன்னவாசல் ஓவியங்கள் போன்ற விஷயங்களை கவா கம்ஸ் கூர்ந்து ஆராய்ந்து எழுதியுள்ளது பாராட்டுக்குரியது. மகாபாரதம், குர்ஆன், பைபிள் வாசகங்களில் ஒழிந்துள்ள தடயங்கள் எல்லாம் தெளிவாகும் இடங்கள் மிக அருமை. தேடிச்செல்லும் புதையல் கூட மிகவும் அருமையான கற்பனை.

இடையிடையே அகிலின் நண்பர்கள் “காமெடி” செய்ய முயல்வதும், சமயங்களில் சிறுபிள்ளைத்தனமான தடையங்களும் நம் கவனத்தை உடைக்கின்றன.

சிறு குறைகளை தவிர்த்தால் இந்த ப்ராஜக்ட் ‘ஃ’ தமிழில் எழுதப்பட்ட Dan Brown நாவல் என்றே சொல்லலாம்.

ப்ராஜக்ட் ‘ஃ’ இப்போது “ழகரம்” என்ற திரைப்படமாக வெளியாகியுள்ளது. வெறும் 10 லட்சம் பொருட்செலவில் படமாக்கியுள்ளார்கள். கண்டிப்பாக தோல் தட்டி பாராட்டுகள் சொல்லலாம்.

நாலு இட்லி. ஒரு கலக்கி (சிறுகதை)

தமிழில் மொழிபெயர்த்து முழுவடிவம் தந்தமைக்கு நன்றி ருபக்ராம்.

 

“சார், நான் எப்போவுமே அப்படிதான் சார். சின்ன வயசுல இருந்தே ஒரு வீட்ட பார்த்தா, முன்வாசல் கதவ தொறக்காம எப்படி உள்ள போறதுன்னு கரெக்ட்டா சொல்லிடுவேன். சில நேரங்கள்ல வண்டி ஒட்டுரோம்னு ஒரு நெனைப்பே இல்லாம வண்டி ஓட்டுவோமே அந்த மாதிரி சார்…” என்று தலையை சொறிந்தான் அந்த இளைஞன்.

அழகாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் கனகசபேசனின் மனைவி அவருடன் சண்டை போட்டுக்கொண்டு அவள் பிறந்த வீட்டுக்கு சென்று மூன்று மாதங்கள் ஆயிற்று. இரவில் வீட்டில் தனியே இருப்பதற்கு நைட் டூட்டியே மேல் என்று ஸ்டேஷனில் நைட் டூட்டி கேட்டு வாங்கிக்கொண்டவர், தினமும் இரவு டூட்டிக்கு போகும் முன்பு ஸ்டேஷன் அருகே இருக்கும் ஹோட்டலில் தனியாக உட்கார்ந்து ஒரு கலக்கி நாலு இட்லி சாப்பிடுவது வழக்கம். ஏழரை நாட்டு சனி இவரை டூட்டியிலும் நிம்மதியாக விடவில்லை – கடந்த இரண்டு மாதங்களாக வரிசையாக வழிப்பறி, திருட்டு என்று அழகாபுரம் எங்கும் ஒரே பிரெச்சனைகள். அனைத்தும் ஒரே கும்பலின் கைவரிசை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.இவ்வளவு தலைவலிகளுக்கு நடுவே இருந்த சப்-இன்ஸ்பெக்டர் இன்று ஊர் பேர் தெரியாத இவன் திடீரென கண்முன் தோன்றி இன்ஃபார்மர் வேலை கேட்டு ஏதோ கதை சொல்கிறான் என்று சற்றே கோபமடைந்தார்.

“யோவ், உனக்கு வேலை வேணும்னா வேற எங்கயாவது போடா. ஏன் என் தாலிய அறுக்குற,” என்று சீறினார்.

“சார், நீங்க அந்த திருட்டு கும்பல புடிக்க ஒரு வெறியோட இருக்கீங்கனு ஏரியால எல்லாருக்கும் தெரியும். நானும் கொஞ்சம் ஹெல்ப் பண்றேன் சார்…” என்று இழுத்தான்.

“ஓஹோ. சமூகஆர்வலரா? மூடிக்கிட்டு உன் வேலைய பாருய்யா,” என்றார் சப்-இன்ஸ்பெக்டர் மீசையில் வழிந்த முட்டையை துடைத்தபடியே.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். எனக்கு எவன் சார் வேலை தர்றான். எனக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் இதுதான். அதை சொன்னா திருடன்னு பயந்து அடிச்சு தொரத்துறாங்க.”“அதனால நேரா போலீஸ்கிட்ட வந்துட்ட! தைரியம்தான்யா.”

“ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க சார். இந்த கும்பல் எப்டி செயல்படுதுன்னு புட்டு புட்டு வெச்சுர்றேன். இதை ஒரு ஹாபியா பண்றேன் சார். திருட்டு பத்தின செய்தியெல்லாம் ஒன்னு விடாம சேகரிச்சு வெச்சுருக்கேன் சார்.”

இன்ஸ்பெக்டர் அவனை மெல்லிய சிரிப்போடு நோக்கினார். அவனது சுத்தமான சட்டையையும், படிய வாரிய தலைமுடியையும் பார்த்தார். “அவன்மேல் எனக்கு ஒரு நல்ல அபிப்ராயம் வரவேண்டுமென மெனக்கெடுகிறான்” என்று சப்-இன்ஸ்பெக்டரருக்கு தோன்றியது. மெல்ல தலை சாய்த்து அவன் ஹவாய் செருப்பையும் சீராக திருத்தப்பட்ட கால்நகங்களையும் கவனித்தார். “கையில் காசு இல்லையென்றாலும் தன்னை சுத்தமாக வைத்துகொள்கிறான். சின்ன விஷயத்தையும் நன்கு கவனிப்பான்” என்று அவருக்கு புரிந்தது.

“சரி. என்கூட வா. ரவுண்ட்ஸ் போறேன். நீ சொல்றது உண்மையானு பாப்போம்.”

முதலில் நேராக ஒரு அமைதியான தெருவுக்குள் ஜீப்பை செலுத்தினார். “இந்த வீடு ஒரு வாரமா பூட்டியிருக்கு. வீட்டுகாரங்க வர ஒரு நாலு நாள் ஆகும். போய் உன் தெறமைய காட்டு” என்றார் சப்-இன்ஸ்பெக்டர்.

முதல் வீடு சுலபமாக அமைந்ததென்ற சந்தோஷத்துடன் அவன் விறுவிறுவென நடந்தான். இந்த தெரு முழுவதும் காம்பவுண்ட் வைத்த தனித்தனி வீடுகள் மட்டுமே இருந்தன. திறந்திருந்த பக்கத்துக்கு வீட்டு கேட்டினுள் நுழைந்து இரண்டு வீடுகளுக்கிடையே இருக்கும் காம்பவுண்டில் ஏறினான். பின்பு சன்-ஷேடு மீது எகிறி மொட்டைமாடிமேல் குதித்தான். அங்கிருந்து, “சார், இங்க ஒரே ஒரு சின்ன பாட்-லாக் பூட்டு. ஒடச்சா நேரா உள்ள பூந்துர்லாம்” என்றான். சப்-இன்ஸ்பெக்டர் அவனிடம் இருந்து இன்னும் எதிர்ப்பார்த்தவர் போல், சற்றும் உணர்ச்சியின்றி, “கீழ வா” என்றார்.

அடுத்து அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு கூட்டிச்சென்றார். மஃப்டியில் இருந்ததால், திடுக்கிட்டு எழுந்த வாட்ச்மேனிடம் தனது அடையாள அட்டையை நீட்டிவிட்டு அவனை உள்ள அழைத்து சென்றார். வாட்ச்மேன் தலையை சொறிந்துகொண்டே ஒரு குழப்பத்துடன் இருவருக்கும் சல்யூட் அடித்தான்.அவன் ஓரிறு நொடிகள் நிதானித்து, பின்னர் கட்டிடத்துக்கு அருகில் இருந்த மரத்தில் சட்டென ஏறி, இரண்டாம் மாடியில் இருந்த ஒரு குளிர்சாதன கம்ப்ரசர் மீது கால் வைத்து, மூன்றாம் மாடி வீட்டின் பால்கனி இரும்புக்கதவை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றான். இரண்டு நிமிடங்கள் கழித்து லிப்ட் கதவை திறந்துக்கொண்டு கீழ்தழத்தில் நின்றுகொண்திருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு வணக்கம் வைத்தான். “மூணாவது மாடி பால்கனி மட்டும்தான் சார் தொரந்திருந்துச்சு” என்றான் சட்டையில் ஒட்டிக்கொண்டிருந்த இலையை தட்டிவிட்டப்படியே.

சப்-இன்ஸ்பெக்டர் ஒரு யோசனையுடன் ஜீப்பை வேறொரு ஏரியாவுக்கு செலுத்தினார். பின் சீட்டில் அமர்ந்தபடி அந்த தெரு முழுவதும் வரிசையாக உயரமான மதில்செவுருகள் கொண்ட பங்களா வீடுகள் மட்டுமே இருப்பதை அவன் கவனித்தான். ஒரு மாளிகை போன்ற பங்களாவின் முன் ஜீப்பை நிறுத்தினார் சப்-இன்ஸ்பெக்டர்.“கொஞ்சம் கஷ்டம்தான் சார்” என்று அவன் தலையை சொரிந்தபடியே கேட்டை நோக்கி நடந்தான். சப்-இன்ப்செக்டர் அவனையே கூர்ந்து கவனித்தார். அவன் மெல்ல அந்த வீட்டின் காம்பவுண்டை சுற்றி வந்தான். சுவரின் மேற்பாகத்தில் தொங்கிக்கொன்டிருந்த ஒரு கயிற்றை கவனித்தான். “சார், என்ன தூக்கிப்புடிக்க ஒரு ஆளு இருந்த ஈசியா அந்த கயிற புடிச்சு உள்ள போய்டுவேன்.” சப்-இன்ஸ்பெக்டர் அமைதியாக அவரது கால்சட்டை பையில் கைவிட்டபடி நின்றார். அவர் உதட்டில் ஏளனமான சிரிப்பு நடமாடியது. அவன் மீண்டும் ஒரு முறை வீட்டை சுற்றி வந்தான். வேலைகாரர்கள், காஸ் சிலிண்டர் போட வருபவர்கள் என வெளி ஆட்கள் வந்து செல்ல இந்த மாதிரி வீடுகளில் பின்புறத்தில் ஒரு சின்ன கேட் இருக்குமென்று அவனுக்கு தோன்றியது. தேடிப்பார்த்தான். இல்லை. அவன் உள்ளங்கையில் வேர்க்க துவங்கியது. கால்கள் நடுங்கின. மீண்டும் ஒரு முறை வீட்டை சுற்றி வந்தான். வழியேதும் கிடைக்காததால் சப்-இன்ஸ்பெக்டரிடம் சென்று “ஒரே வழி. தூங்குற வாட்ச்மேன் கழுத்த உடச்சுட்டு அழகா மெயின் கேட் வழியாவே உள்ள போறதுதான் சார்.”

“என்ன நக்கலா? நீ சொன்னது என்ன? எந்த வீடா இருந்தாலும் வீட்டு வாசல தொடாம உள்ள போய்டுவேன்னு. மூணுல ஒரு வீடு உன்னால நுழைய முடியல. உன்ன விட திறமையான ஆளுங்க டிபார்ட்மெண்ட்லயே இருக்காங்க. நான் இருக்க நெலமைல அந்த திருட்டு கும்பல புடிக்க எந்த வழி கெடச்சாலும் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன். நீ என்னடானா வாட்ச்மேன் கழுத்த ஒடக்கனும்கிற. அடிச்சு உன்னையும் அந்த கும்பலோட உள்ள தூக்கி வைக்கணும் போல இருக்கே.” சப்-இன்ஸ்பெக்டர் விரக்தியில் சீறினார்.

“சார், எனக்கு இத விட்டா வேற எதுவும் தெரியாது சார். இந்த தெறமைய வெச்சு ஒன்னு திருடன் ஆகணும் இல்ல உங்கள மாதிரி ஆட்களுக்கு உதவி செய்யனும். உங்கள தேடி வந்தா நீங்களே என்னை உள்ள வெப்பேன்னு சொன்னா நான் என்ன சார் பண்ணட்டும்.”

“உன்ன நம்பி எனக்கு இவ்ளோ நேரம் டயம் வேஸ்ட். அடி வாங்கிக்காம அமைதியா போயிரு.”அவன் பாவமாக அழாத குறையாக கெஞ்சினான்,

“சார். இன்னும் ஒரே ஒரு வீடு. கடைசியா. கேக்குறேன்னு தப்பா நெனைக்க வேணாம். நீங்க அந்த கும்பல புடிப்பென்னு டிவி, பேப்பர்ல எல்லாம் பேட்டி கொடுத்தீங்க. உங்க வீட்டையே அவங்க ஆட்டைய போட்டுட்டா? நீங்க உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. எப்டி உள்ள ஏறுவாங்கனு கரெக்ட்டா சொல்லிடறேன். உங்க வீட்ட சேப்ப்டி பண்ணிறலாம்.”

“…தா. என்ன கொழுப்பா? எல்லாம் எங்களுக்கு தெரியும், நீ பொத்திக்கிட்டு வண்டில ஏறு. பஸ் ஸ்டாப்ல இறக்கி விடறேன் அடி வாங்காம வீடு போய் சேரு.” அவன் ஏறுவதற்குள் சப்-இன்ஸ்பெக்டர் கோபமாக ஜீப்பை ஸ்டார்ட் செய்தார்.

ஜீப்பின் பின் சீட்டில் ஏறிக்கொண்டு அவன் மீண்டும் கெஞ்சினான், “சார். தயவுசெஞ்சு இன்பார்மரா சேர்த்துக்கோங்க சார்.”

சப்-இன்ஸ்பெக்டர் பதிலேதும் சொல்லாமல் இருக்கவே அவன் மெல்ல தொடங்கினான், “எல்லா கும்பலுக்கும் நாலு டைப் ஆளுங்க தேவை சார். கும்பல்ல எத்தன பேரு வேணா இருக்கலாம். ஆனா நாலு பேரு முக்கியம்.” சப்-இன்ஸ்பெக்டர் ஜீப்பின் வேகத்தை குறைத்தார். சாலையில் இருந்து கவனத்தை விளக்காமல் அவன் சொல்வதை கூர்ந்து கவனித்தார்.

“திருட்டு கும்பல்களுக்குனே ஒரு பாஷை இருக்கு- சாவி, கட்ட, பல்லினு சொல்லுவாங்க. சாவி எந்த வித பூட்டா இருந்தாலும் ஓடைச்சுருவான். பூட்டு ஓடைக்குறவன் உங்களுக்கே தெரியும் எவ்ளோ முக்கியம்னு. கட்ட ஒரு தடியன்…மத்தவங்கள தூக்கி விடவோ இல்ல பிரெச்சனனு வந்தா சமாளிக்க ரொம்ப முக்கியம்…பல்லி எவ்வளவு உயராமான இடம்னாலும் ஏறிருவான்… இப்போ இருக்க அபார்ட்மென்ட் எல்லாம் கும்பல்ல ஒரு பல்லி இல்லாம ஒன்னும் பண்ண முடியாது சார்.” ஜீப்பின் வேகம் இன்னும் குறைந்தது. “இப்போ, நீங்க காமிச்ச முதல் வீட்ட பூட்ட ஒடச்சு கொள்ளையடிக்க ஒரு “சாவி” வேணும். ரெண்டாவதா போன அபார்ட்மென்ட்க்கு ஏறுற “பல்லி” வேணும். அந்த பங்களா பார்த்தோம் இல்ல சார், அதுல “கட்ட” ஒருத்தன் இல்லாம உள்ள போக முடியாது” என்று அவன் சொல்லி முடித்தான்.“எல்லாம் சரி. நாலு பேருனு சொன்ன. அந்த நாலாவது ஆள் யாரு?” என்று கேட்டபடியே ஒரு இருட்டான தெருவுக்குள் ஜீப்பை திருப்பினர் சப்-இன்ஸ்பெக்டர். “அவன்தான் சார் ரொம்ப முக்கியாமான ஆளு. சீட்டு கட்டு ஜோக்கர் மாதிரி. எல்லா கும்பல்லையும் அவன்தான் மூல. எந்த வீடு காலியா இருக்குனு பாக்குறதுக்கு, பதுக்கி வெச்ச அயிட்டங்கள அடுத்த நாள் சாதாரண ஆளு மாதிரி போய் எடுக்கறதுக்குனு எல்லாத்துக்குமே அவன்தான் முக்கியம். எந்த வேலையும் செய்ய தெரியலனாலும் பேசியே எல்லாம் தெரியும்னு நம்ப வெச்சுருவான். திருடங்களுக்குள்ள அதுக்கு பேரு பட்டாணி போடறதுன்னு சொல்லுவாங்க.”

“அடேயப்பா. இவ்ளோ தெரிஞ்சு வெச்சுருக்க” என சப்-இன்ஸ்பெக்டர் சொல்லும்போதே அந்த இருண்ட தெருவில் மூன்று பேர் ஜீப்பை நோக்கி ஓடி வருவதை கவனித்தார். விருட்டென பிரேக் அடிக்க கிரீச்சிட்டு நின்றது அந்த ஜீப். பிரேக் அடித்த வேகத்தில் பின் சீட்டில் இருந்தவன் முன் சீட்டின் மீது தூக்கியெறியப்பட, அவன் சட்டென சப்-இன்ஸ்பெக்டரின் கழுத்தை இறுக்கி பிடித்தான். “சொன்னேன் இல்ல சார். இதோ அந்த மூணு பேரு, சாவி, கட்ட, பல்லி…” என்று சிரித்த படியே கழுத்தை இன்னும் நெறுக்கி அழுத்தினான். எதிர்க்க நடந்து வந்த “கட்ட” தடியன், சப்-இன்ஸ்பெக்டர் ஏதோ நுரையால் செய்த சிலைபோல் அலேக்காக இழுத்து ரோட்டில் வீசினான். அவர் கைகளை பின்னே இணைத்து அந்த தடியன் கட்டிக்கொண்டிருக்க, ஜீப்பின் பின் சீட்டிலிருந்து அவன் கீழே இறங்கி மற்ற இரண்டு பேரிடமும் கூறினான், “மூணு வீடுங்க. தப்பிக்க இந்த ஜீப். உங்க மூணு பேருக்கும் இன்னைக்கு நைட் வேலை இருக்கு. நைட்டோட நைட்டா ஊர காலி பண்றோம்.”

திமிறிக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரின் வாயில் துணியை வைத்து தினித்துக்கொண்டிருந்த தடியனிடம் திரும்பி, “டேய், முக்கியமா சப்-இன்ஸ்பெக்டர் சார் வீட்டு சாவிய மறந்துறாத. அவர் பாண்ட் பாக்கெட்ல இருக்கும்.” என்று சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தபடியே அவர் கண்ணை பார்த்தான். “யோவ் இன்ஸ்பெக்டரு, அந்த  நாலாவது ஆளுக்கு பசங்க வெச்ச பேரு என்ன தெரியுமா? நரி…” என்றான் கிளம்பிய ஜீப்பின் பின்சீட்டில் குதித்தேரியபடியே.

நல்லதொரு தொடக்கம்.

22/12/2013

தமிழில் தட்டச்சிட கற்றுக்கொண்டேன். விசைப்பலகையும் கையுமாக நானே எனக்கே எனக்காக சிறு சிறு வாக்கியங்கள் செய்து பார்த்துக்கொண்டேன்.  என் விரல்களில் இருந்து கூகிள் மென்பொருளின் உதவியுடன் திரையில் வந்து விழும் ஒவ்வொரு வார்த்தையும் மகிழ்ச்சியே.

என் மொழியை நான் எழுத கூகிள் உதவி. நான் கால் உடைந்த நாய் போலவும், கூகிள் பின்னங்காலில் கட்டிவிடப்பட்ட சக்கரம்போலவும் இருந்தும்,  நானே எழுந்து ஓடுவதுப்போல் மனதில் ஒரு நினைப்பு.

மடிக்கணினியில் முதல் முறை தமிழ் எழுத எழுத நினைவுக்கு வந்தவர் அமரர் சுஜாதா. மென்பொருள், கணினி என தமிழில் அவருக்கே உரிய பிரமிப்பூட்டும் தமிழ் நடையில் அவர் பேசவது தான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தன.

சில நாட்கள் முன்பு மதன் கார்கி அவர்கள் ஒரு கணினி மென்பொருள் வடிவமைத்திருப்பதாகவும் அது தானாகவே கவிதை செய்யும் என்றும் படித்தேன். “கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு” என்று சுஜாதா அவர்கள் எழுதிய ஒரு சிறுகதை போலவே இருந்தது. கதை இன்று நிஜம் ஆனது. சுஜாதா இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று எண்ணிப்பார்க்க வியப்பாக உள்ளது.

கார்கியோ சுஜாதாவோ கூகிள் உதவியுடன் தமிழ் எழுதவதை தப்பாக நினைத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். சுஜாதா திரைக்கதை எழுதும் ஒரு மென்பொருளுக்கு முதல்முறையாக தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்து அதை மருதநாயகம் படத்தின் போது உபயோகிக்க நினைத்ததாக படித்தேன்.

இந்த புது கூகிள் கருவியின் உதவி கொண்டு ஒருவர் சிலப்பதிகாரம் பற்றி பேசுயிருப்பார், அடுத்தவர் ஹஸ்க லஸ்கா போல் ஒரு பாடல் எழுதியிருப்பார். அடியேன் நானோ முதல் முறையாக மகிழ்ச்சி போங்க (மகிழ்ச்சி என்று தமிழில் டைப் செய்யும் பொழுதெல்லாம் அந்த சொல்லின் உச்சரிப்பில் சந்தோஷமடைந்து, பெரிதாக சிரித்துகொண்டே) என் தமிழ் வலைப்பதிவை தொடங்குகிறேன்!