வளரி (சிறுகதை)

தமிழில் மொழிபெயர்த்து முழுவடிவம் தந்தமைக்கு நன்றி ருபக்ராம்.

வளரி தமிழர்களின் ஒரு உன்னத ஆயுதம். அதை பற்றி மேலும் அறிய ஆவல் உள்ளவர்கள் இந்த காணொளியை காணலாம்.

இனி சிறுகதை…

“யுத்ததேவன் பூமியை ஆட்கொண்டிருந்த காலம் அது. ஆடவர் போரில் சண்டையிட்டு, உணவு உண்டு, மது அருந்தி, உறங்கி, விழித்து மீண்டும்  போருக்கு சென்று சண்டையிடுவதையே தம் குலத் தொழிலாக கொண்டிருந்த அந்தக் காலத்தில், பெண்கள் வீட்டில் இருந்து குழந்தைகளைப் பெற்று வளர்த்து, அவர்களை வீரர்களாகவும் அரசர்களாகவும் மாற்றினர். இன்னும் சில வீர தமிழ் பெண்மணியினர்  தங்கள் தந்தையினரும், தமயர்களும், கணவன்மார்களும், மகன்களும் போர்களத்தில் தினந்தோறும் செத்துமடிய; உள்நாட்டில் சதிசெய்து மன்னர் இல்லாத நாட்டை சூறையாட நினைத்த கயவர்களிடமிருந்து நாட்டை காத்தனர்.

ஒரு வெப்பமான கோடைக்காலத்தின் மாலைப் பொழுதில் ராமநாதபுரத்தின் வீதிகளின் வழியே நிதி அமைச்சர் தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் நடையில் ஒருவித அவசரம் தெரிந்தது.

தலைநகரில் வசித்தவர்களுக்கு போர் எங்கோ ஒரு தூர தேசத்தில் நடப்பது போன்ற உணர்வு இருந்தது. போரின் எதிரொலி அந்த நகர வீதிகளில் காணப்படவில்லை. இருப்பினும் போரின் விளைவுகள் மேல் தட்டு அரசியலில் தென்படத் தொடங்கியிருந்தன.

அமைச்சர் கடைத்தெருவில் இருந்த ஒரு சிறிய கடை முன் நின்று, தேன் மற்றும் ம ல்லிகைப் பூ வாங்கினார். போரினால் நான்கு மடங்கு விலை அதிகரித்துஇருந்ததை அவர்  பொருட்படுத்தாமல் கூடுதலாக ஒரு நாணயத்தை அந்த மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு,  மீண்டும் நடக்கத் தொடங்கினார்.

அவர் சென்றவுடன், அந்த மூதாட்டி ஒரு பழைய கோணிப் பையால் தன் கடையை மூடி விட்டு, கடைத் தெருவின் எதிர் திசையில் நடந்தாள். அவளின் ஒரே மகன் போர்க் காயங்களால் கை கால் செயலற்று, குருடாகி வீட்டில் இருந்தான். அவள் பதினேழு வயது பேரனோ போர் முனையில் அவன் தந்தையின் இடத்தில் இருந்து, ராமநாதபுரத்தின் வீரப் புகழைநிலை நாட்ட போராடிக்கொண்டிருந்தான்.

வேகமாக கடைத்தெருவை கடந்த அமைச்சர், ஒரு குறுக்குச் சந்தில் திரும்பினார். சாதாரண நாளில் ராமநாதபுரத்தின் நிதி அமைச்சர் வீதிகளில் தனியாக நடந்து செல்வது அதிசயக்காட்சியாக இருந்திருக்கும். ஏனெனில் அவரது மெய்க்காப்பாளர்கள் அவரை ஒரு அடி கூட தனியாக விடுவதில்லை. யுத்தமானது இயல்பு வாழ்கையை விழுங்கி நாடெங்கும் ஒரு குழப்பமான நிலையை நிலவச் செய்திருந்தது. அவரது மெய்க்காப்பாளர்களை சில தெருக்கள் தள்ளி இருக்கும் கள்ளுக் கடையில் சில மணி நேரம் காத்திருக்க ஆணையிட்டிருந்தார். அவர்களும் அவரது ஆணைக்கு அடிப்பணிந்து  அந்தக் கள்ளுக் கடையில் காத்துக்கொண்டிருந்தனர். அமைச்சர் ஒடுக்கமான பாதையில் திரும்பி நடந்தார். அந்தப் பாதை சற்று இருட்டாக  இருக்கவே குழிகளிளும் சாணத்திலும் சிக்காமல் கவனமாக நடந்து அந்தப்  பாதையின் முடிவில் இருந்த ஒரு வீட்டின் வாசலை அடைந்தார். வீட்டின் மரக் கதவை குறிப்பிட்ட சில இடைவெளியுடன் மூன்று  முறைத் தட்டி, அந்தக்  கதவு திறக்க காத்திருந்தார்…


***
முப்பது நாட்களாக யுத்த களத்தில் சண்டை புரிந்த அந்த வாலிபன் தனது வலது கை பெறு விரலை இழந்திருந்தான். மேலும் அவன் கால் விரல்கள் குதிரைக்குளம்பில் நசுக்கப்பட்டு காயமடைந்திருந்தன. எதிரியின் வாள்வீச்சில் தனது ஒரு காதை இழக்காமல் மயிர் இழையில் தப்பியிருந்தான். இருப்பினும், துணியால் தன் காயங்களைக் கட்டிக் கொண்டு, போர்க்களத்தில் எதிரி நாட்டு வீரர்களை பந்தாடிக்கொண்டிருந்தான்.  தன் உடலில் இருந்து வியர்வை,  ரத்தம் என எது வடிந்த பொழுதும் அவன் சண்டையை நிறுத்துவதாய் இல்லை. எதையும் பொருட்படுத்தாமல் போர் புரிந்த அந்த வாலிபன் யுத்தகளத்தில் ராமநாதபுரத்தின் மாவீரனாகவே காட்சியளித்தான். தன் தந்தையிடம் இருந்து, போர்க்கதைகள், அவரின் வீர சாகசங்கள், நாடு மற்றும் அரசன் மீது ஒரு குடிமகனுக்கு இருக்க வேண்டிய பற்று போன்றவற்றை கேட்டு வளர்ந்த அவனுக்கு சிறு வயதில் இருந்தே போர் மீது ஒரு காதல் இருந்தது. பல நூறு வீரர்களுடன், உடைந்த காலுடன் இருட்டில் தடுமாறி, கொசுக்கள் நிறைந்த  சதுப்பு நிலத்தில் மலம் கழிக்கும் பொழுது, எந்தக் கதையும் ஒரு வெற்றிக்குபின் இருந்த, முகம் தெரியாத பல ஆயிரக்கணக்கான வீரர்களின்  வலிகளைப் பற்றி சொல்வதில்லை என்று தன்னுள் எண்ணி வருந்தினான்.

அவன் தேச பக்தியே அவன் காயத்திற்கு மருந்து…

***


‘நீங்க இதை வாங்கி இருக்கக் கூடாது’ என்றது வளையல்களின் பின்னணி இசையுடன் ஒரு ரம்மியமான பெண்குரல்.

‘என்னிடம் இல்லாத செல்வமா?’ என்று கூறிக்கொண்டே அமைச்சர் தேனையும் மல்லிகையையும்  அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

‘இன்றைக்கு என்ன விலை?’ என்று அவள்  தினமும் கேட்பதுபோலவே இன்றும் கேட்க, அமைச்சர் காதில் விழுந்தது போல் காட்டிக்கொள்ளவில்லை.

‘நிதி அமைச்சர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ?’ என்று கேட்டாள் சிரித்தபடியே.

‘அமைச்சரா?… மஹும்… இன்னும் சில நாட்களில் ராமநாதபுரத்தின் அரசன் நான்’ என்று பெருமையாக சிரித்தார்.

‘இதென்ன புதுக்கதை? என்னிடம் எதையும் நீங்கள் முழுசாக சொல்வதேயில்லை ‘ என்று சலித்துக் கொண்டாள்.

‘என்னுடைய வருங்கால அரசிக்கு கோவமா? இதோ சொல்கிறேன் கேள். அரசன் போருக்கு சென்றவுடன், வடதேசத்துபடையில் இருந்து சில வீரர்களை விலை கொடுத்து வாங்குவேன். அவர்களை போர்க்களத்திற்கு அனுப்பி, அரசனைக் கொன்று, எதிர்க்கும் அரசர்களுக்கு பெருமளவு கப்பம் கட்டி, ராமநாதபுரத்தின் மன்னனாக முடிசூடிக் கொள்ளப்போகிறேன்’, அமைச்சரின் முகத்தில் அந்தக் கணம் ஒரு கொடிய நாகத்தின் சீற்றம் இருந்தது. ‘இதற்கு பலிகடா யார்? மக்கள். வரிகட்டி, தந்தைகளையும் தமயன்களையும் போருக்கு அனுப்பி, எனக்காக சண்டையிடும் மக்கள்’.

‘மக்களுக்கு உண்மை தெரிந்தால்?’ என்று பயத்துடன் கேட்டாள் அவள்.

‘அரசனை எதிர்த்து மக்களால் என்ன செய்ய முடியும்’ என்று சொல்லி  ஏளனமாக சிரித்தான்.

***

அன்று இரவு அந்த வாலிபன் தன் கூடாரத்திற்கு திரும்புகையில், காட்டின் முனையில் குதிரைகள் வரும் சலசலப்பு கேட்டது. ஒரு வீரனின் வீட்டில் வளர்ந்த அந்த வாலிபனால் ராமநாதபுரத்து குதிரைகள் எந்த தூரத்தில் இருந்து  வந்தாலும் சரியாக கணித்து விடுமுடியும். இந்த சத்தம் ராமநாதபுரத்து குதிரைகளுடையது அல்ல என்பது அவனால் நிச்சயம் உணர முடிந்தது. அவை வடதேசத்துப் படைக் குதிரைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று  தீர்மானித்தான். சுதாரித்துக் கொண்டு ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். குதிரைகள் நெருங்கி  வர வர, அந்த சத்தத்தின் எதிர் திசையை நோக்கினான். வீரர்களின்  கூடாரத்திற்கு பின்னே இருந்த ராஜாவின் கூடாரம், பௌர்ணமி  நிலவொளியில்  தனியாக தெரிந்தது. ஆபத்தை உணர்ந்து ‘ராஜாவிற்கு ஆபத்து’ என உரக்க கத்திக் கொண்டு, அரச கூடாரத்தை நோக்கி ஒற்றைக் காலை நொண்டிக்கொண்டு ஓடினான். அதற்குள் கறுப்புக் குதிரையில் வந்த சுமார் நாற்பது வீரர்கள் அரசனின் கூடாரத்தை நெருங்கிவிட்டனர்.

அந்த வடக்கு வீரர்கள் குதிரையில் இருந்து இறங்கி தங்கள் வாள்களையும் வேல்களையும் கையில் உயர்த்திப் பிடித்தனர். அரச கூடாரத்தின் வாயிலில் நின்ற அந்த வாலிபன் மேல் எறியப்பட்ட வேல், அவன் வலது தோளை உறசிச் சென்று கூடாரத்தின் துணியைக் கிழித்தது. வாலிபனின் கூச்சல் சத்தத்தால் விழித்த மற்ற வீரர்கள் ஆயுதங்களுடன் அரச கூடாரத்தை நோக்கி விரைந்தனர்.

வடக்கு வீரர்கள் தன்னை நோக்கி முன்னேற, மற்ற வீரர்கள் அரசனை காக்க கீழே இருந்து ஓடி வர, அரசர் கூடாரத்தை விட்டு வெளியே வருவதையும், அவர் கையில் ஆயுதம் ஏதும் இல்லாததையும் அந்த வாலிபன் கண்டான். 

வடக்கு வீரர்கள் மற்ற வீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அந்த வாலிபன் கூடாரத்தின்  வாயிலில் அரசரை பாதுகாக்க விரைந்தான். வடக்கர்கள் எப்பொழுதும் வஞ்சகமாக வெல்பவர்கள் என்பதால் இருட்டில் நாலாப் புறமும் விழிப்புடன் நோக்கியபடியே சிதைந்த கால்விரல்களுடன் சிரமப்பட்டு ஓடினான். நிலவை மேகம் மறைக்க, எங்கும் இருள் சூழ கூடாரத்தின் மற்ற முனையில் இருந்து தாடியுடன் ஒரு வீரன் மெதுவாக அரசரை நெருங்வதை கவனித்தான்…

***


மறுநாள் மாலை அதேக் கடையில் பூக்களை வாங்கிய அமைச்சர், காசு கொடுக்க முயலும் பொழுது, அந்த மூதாட்டி காசு வாங்க மறுத்தாள். ‘போரில் துயரப் படும் நம் வீரர்களுக்கு நான் கொடுக்கும் காணிக்கையாக  இதை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு அமைச்சர் சென்றவுடன்  தன் கடையை மூடத் தொடங்கினாள்.

அமைச்சர் கடைத்தெரு வழியே  அந்தக் குறுக்கு வீதியில் சென்று, ஒடுக்கமான பாதையில் இருக்கும் அந்த வீட்டை அடைந்தார். கதவை மூன்று முறை தட்டினார். அவரை பின்தொடர்ந்து வந்த மூதாட்டி எதிரில் இருந்த ஒரு புதரில் மறைந்ததை அவர் கவனிக்கவில்லை. கதவு திறந்தது.

‘இன்றைக்கு என்ன விலை கொடுத்து வாங்கினீர்?’ என்று கேட்டது அந்த பெண்ணின் குரல், வசீகர சிரிப்புடன்.

‘இன்று இலவசம்’ என்றார் அமைச்சார்.

‘அப்படியா!’ என்று அமைச்சரை நிமிர்ந்து பார்த்தவள், தன் பின் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தாள். அந்த கத்தி மின்னியதைக் கண்டஅமைச்சர், சுதாரித்து பின்வாங்க, கத்தி அவர் மார்பில் பாய்ந்தது. வாசற்கதவு சட்டத்தில் இடறிய அமைச்சர், அடி பட்ட பன்றி போல் தெருவில் விழுந்தார். 

ஒரு நொடிப்பொழுதில் மாரில் செருகியிருந்த கத்தியை உருவி எறிந்துவிட்டு ஓடத் தொடங்கினார். புதரில் இருந்த மூதாட்டி தன் சேலை மறைவில் இருந்த வளரியை எடுத்த வலிமையுடம் வீசினாள். அந்த வளரி தெருவில் ஓடிக்கொண்டிருந்த அமைச்சரின் பின் மண்டையை பிளந்து, பின் சுழன்றுக்கொண்டே சற்றே தள்ளி விழுந்தது. மூதாட்டி அந்த வளரியை எடுத்து, தன் சேலை மடிப்பில்  வைத்துக்கொண்டு, அரண்மனையை நோக்கி வேகமாக நடந்தாள்…

***

அந்த வடதேசத்து வீரன் அரசரை நெருங்குவதைக் கண்ட வாலிபன், தன் ஆடையினுள் இருந்த வளரியை கையில் எடுத்துக் கொண்டு, சரியான தருணம் வர தயாராக காத்திருந்தான். அவன் வளரி இரும்பினால் செய்யப்பட்டு, ஒரு முனை பந்துபோல் உருண்டையாகவும் மறு முனை வாள் போல்கூர்மையாகவும் இருந்தது. வடதேசத்து வீரன் தன் வாளை நீட்டக்கொண்டு அரசரை நோக்கி முன்னேற, அந்த வீரவாலிபன் வளரியை வீசினான்.அந்த வளரி காற்றில் சில வினாடிகள் தங்கி, மீண்டும் வலது புறம் திரும்பி அரசரை நோக்கி வந்தது. வளரி தன்னை  நோக்கி வருவதைக் கண்ட அரசர், பதறி கீழே அமர, அந்த வளரி அரசரின் பின்னே நின்ற வடக்கு வீரனின் கழுத்தை துண்டித்தது. அமர்ந்தபடியே அந்த வடதேசத்து கொலைகாரன் முண்டமாக கீழே சரிந்து விழுவதை அதிர்ச்சியுடன் கண்டார் அரசர். மெய்க்காப்பாளர்கள் வந்து அரசரை சூழ, அந்த வாலிபன் தன் வளரியை எடுத்துக்கொண்டு வடக்கு வீரர்களுடன் போரிடச் சென்றான். அரசரின் படைவீரர்கள், சில நிமிடங்களில் அந்த வடக்கு வீரர்களை துவம்சம் செய்துவிட்டனர்.

இரண்டு நாட்களுக்கு பிறகு ராமநாதபுரத்து அரசியிடம் இருந்து அரசருக்கு
ஒற்றர் தலைவன் ஓர் ஓலை கொண்டு வந்தான்.

‘நிதி அமைச்சரின் சூழ்ச்சி அம்பலமானது. தக்க சமயத்தில் தலைநகரம் காப்பாற்றப்பட்டது. உங்களை வஞ்சகமாக தாக்க சில வடக்கு வீரர்களை ஏவியுள்ளார். கவனாமாக இருங்கள்.’
அரசர் ஓலை கொண்டு வந்த ஒற்றர் மூலம் அமைச்சரின் மரணம் குறித்த தகவல்களை கேட்டு அறிந்துகொண்டார். மெல்ல புன்னகைத்தார். 

போருக்கு ஆயத்தமான அரசர் தனது மெய்க்காப்பாளராக உங்கள் அப்பாவை நியமித்தார்…” என்று சொல்லி முடிக்கும் முன் கதை கூறிக்கொண்டிருந்த தான் தாய் மடியிலிருந்து, ‘வளரி…வளரி’ என்று கத்திக்கொண்டே கீழே குதித்தான் அந்த சிறுவன்.

‘அது என்னுடைய வளரி. திருப்பிகொடுடா’ என்று அவன் அண்ணன் அவனை துரத்தினான்.

‘பெரிய மருது, அவன் உன் தம்பிதானே சற்று நேரம் விளையாடட்டும் விடு. நீ இங்கு வந்து சாப்பிடு. நீ உண்ணாவிட்டால் அம்மா உனக்கு வளரி வீச சொல்லித் தர மாட்டேன்’ என்று கையில் சோற்றுக் கிண்ணதுடன் தன் மகன்களை பார்த்து சத்தமிட்டாள் அந்த வீரமான தமிழ் தாய்.

நாலு இட்லி. ஒரு கலக்கி (சிறுகதை)

தமிழில் மொழிபெயர்த்து முழுவடிவம் தந்தமைக்கு நன்றி ருபக்ராம்.

 

“சார், நான் எப்போவுமே அப்படிதான் சார். சின்ன வயசுல இருந்தே ஒரு வீட்ட பார்த்தா, முன்வாசல் கதவ தொறக்காம எப்படி உள்ள போறதுன்னு கரெக்ட்டா சொல்லிடுவேன். சில நேரங்கள்ல வண்டி ஒட்டுரோம்னு ஒரு நெனைப்பே இல்லாம வண்டி ஓட்டுவோமே அந்த மாதிரி சார்…” என்று தலையை சொறிந்தான் அந்த இளைஞன்.

அழகாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் கனகசபேசனின் மனைவி அவருடன் சண்டை போட்டுக்கொண்டு அவள் பிறந்த வீட்டுக்கு சென்று மூன்று மாதங்கள் ஆயிற்று. இரவில் வீட்டில் தனியே இருப்பதற்கு நைட் டூட்டியே மேல் என்று ஸ்டேஷனில் நைட் டூட்டி கேட்டு வாங்கிக்கொண்டவர், தினமும் இரவு டூட்டிக்கு போகும் முன்பு ஸ்டேஷன் அருகே இருக்கும் ஹோட்டலில் தனியாக உட்கார்ந்து ஒரு கலக்கி நாலு இட்லி சாப்பிடுவது வழக்கம். ஏழரை நாட்டு சனி இவரை டூட்டியிலும் நிம்மதியாக விடவில்லை – கடந்த இரண்டு மாதங்களாக வரிசையாக வழிப்பறி, திருட்டு என்று அழகாபுரம் எங்கும் ஒரே பிரெச்சனைகள். அனைத்தும் ஒரே கும்பலின் கைவரிசை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.இவ்வளவு தலைவலிகளுக்கு நடுவே இருந்த சப்-இன்ஸ்பெக்டர் இன்று ஊர் பேர் தெரியாத இவன் திடீரென கண்முன் தோன்றி இன்ஃபார்மர் வேலை கேட்டு ஏதோ கதை சொல்கிறான் என்று சற்றே கோபமடைந்தார்.

“யோவ், உனக்கு வேலை வேணும்னா வேற எங்கயாவது போடா. ஏன் என் தாலிய அறுக்குற,” என்று சீறினார்.

“சார், நீங்க அந்த திருட்டு கும்பல புடிக்க ஒரு வெறியோட இருக்கீங்கனு ஏரியால எல்லாருக்கும் தெரியும். நானும் கொஞ்சம் ஹெல்ப் பண்றேன் சார்…” என்று இழுத்தான்.

“ஓஹோ. சமூகஆர்வலரா? மூடிக்கிட்டு உன் வேலைய பாருய்யா,” என்றார் சப்-இன்ஸ்பெக்டர் மீசையில் வழிந்த முட்டையை துடைத்தபடியே.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். எனக்கு எவன் சார் வேலை தர்றான். எனக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் இதுதான். அதை சொன்னா திருடன்னு பயந்து அடிச்சு தொரத்துறாங்க.”“அதனால நேரா போலீஸ்கிட்ட வந்துட்ட! தைரியம்தான்யா.”

“ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க சார். இந்த கும்பல் எப்டி செயல்படுதுன்னு புட்டு புட்டு வெச்சுர்றேன். இதை ஒரு ஹாபியா பண்றேன் சார். திருட்டு பத்தின செய்தியெல்லாம் ஒன்னு விடாம சேகரிச்சு வெச்சுருக்கேன் சார்.”

இன்ஸ்பெக்டர் அவனை மெல்லிய சிரிப்போடு நோக்கினார். அவனது சுத்தமான சட்டையையும், படிய வாரிய தலைமுடியையும் பார்த்தார். “அவன்மேல் எனக்கு ஒரு நல்ல அபிப்ராயம் வரவேண்டுமென மெனக்கெடுகிறான்” என்று சப்-இன்ஸ்பெக்டரருக்கு தோன்றியது. மெல்ல தலை சாய்த்து அவன் ஹவாய் செருப்பையும் சீராக திருத்தப்பட்ட கால்நகங்களையும் கவனித்தார். “கையில் காசு இல்லையென்றாலும் தன்னை சுத்தமாக வைத்துகொள்கிறான். சின்ன விஷயத்தையும் நன்கு கவனிப்பான்” என்று அவருக்கு புரிந்தது.

“சரி. என்கூட வா. ரவுண்ட்ஸ் போறேன். நீ சொல்றது உண்மையானு பாப்போம்.”

முதலில் நேராக ஒரு அமைதியான தெருவுக்குள் ஜீப்பை செலுத்தினார். “இந்த வீடு ஒரு வாரமா பூட்டியிருக்கு. வீட்டுகாரங்க வர ஒரு நாலு நாள் ஆகும். போய் உன் தெறமைய காட்டு” என்றார் சப்-இன்ஸ்பெக்டர்.

முதல் வீடு சுலபமாக அமைந்ததென்ற சந்தோஷத்துடன் அவன் விறுவிறுவென நடந்தான். இந்த தெரு முழுவதும் காம்பவுண்ட் வைத்த தனித்தனி வீடுகள் மட்டுமே இருந்தன. திறந்திருந்த பக்கத்துக்கு வீட்டு கேட்டினுள் நுழைந்து இரண்டு வீடுகளுக்கிடையே இருக்கும் காம்பவுண்டில் ஏறினான். பின்பு சன்-ஷேடு மீது எகிறி மொட்டைமாடிமேல் குதித்தான். அங்கிருந்து, “சார், இங்க ஒரே ஒரு சின்ன பாட்-லாக் பூட்டு. ஒடச்சா நேரா உள்ள பூந்துர்லாம்” என்றான். சப்-இன்ஸ்பெக்டர் அவனிடம் இருந்து இன்னும் எதிர்ப்பார்த்தவர் போல், சற்றும் உணர்ச்சியின்றி, “கீழ வா” என்றார்.

அடுத்து அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு கூட்டிச்சென்றார். மஃப்டியில் இருந்ததால், திடுக்கிட்டு எழுந்த வாட்ச்மேனிடம் தனது அடையாள அட்டையை நீட்டிவிட்டு அவனை உள்ள அழைத்து சென்றார். வாட்ச்மேன் தலையை சொறிந்துகொண்டே ஒரு குழப்பத்துடன் இருவருக்கும் சல்யூட் அடித்தான்.அவன் ஓரிறு நொடிகள் நிதானித்து, பின்னர் கட்டிடத்துக்கு அருகில் இருந்த மரத்தில் சட்டென ஏறி, இரண்டாம் மாடியில் இருந்த ஒரு குளிர்சாதன கம்ப்ரசர் மீது கால் வைத்து, மூன்றாம் மாடி வீட்டின் பால்கனி இரும்புக்கதவை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றான். இரண்டு நிமிடங்கள் கழித்து லிப்ட் கதவை திறந்துக்கொண்டு கீழ்தழத்தில் நின்றுகொண்திருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு வணக்கம் வைத்தான். “மூணாவது மாடி பால்கனி மட்டும்தான் சார் தொரந்திருந்துச்சு” என்றான் சட்டையில் ஒட்டிக்கொண்டிருந்த இலையை தட்டிவிட்டப்படியே.

சப்-இன்ஸ்பெக்டர் ஒரு யோசனையுடன் ஜீப்பை வேறொரு ஏரியாவுக்கு செலுத்தினார். பின் சீட்டில் அமர்ந்தபடி அந்த தெரு முழுவதும் வரிசையாக உயரமான மதில்செவுருகள் கொண்ட பங்களா வீடுகள் மட்டுமே இருப்பதை அவன் கவனித்தான். ஒரு மாளிகை போன்ற பங்களாவின் முன் ஜீப்பை நிறுத்தினார் சப்-இன்ஸ்பெக்டர்.“கொஞ்சம் கஷ்டம்தான் சார்” என்று அவன் தலையை சொரிந்தபடியே கேட்டை நோக்கி நடந்தான். சப்-இன்ப்செக்டர் அவனையே கூர்ந்து கவனித்தார். அவன் மெல்ல அந்த வீட்டின் காம்பவுண்டை சுற்றி வந்தான். சுவரின் மேற்பாகத்தில் தொங்கிக்கொன்டிருந்த ஒரு கயிற்றை கவனித்தான். “சார், என்ன தூக்கிப்புடிக்க ஒரு ஆளு இருந்த ஈசியா அந்த கயிற புடிச்சு உள்ள போய்டுவேன்.” சப்-இன்ஸ்பெக்டர் அமைதியாக அவரது கால்சட்டை பையில் கைவிட்டபடி நின்றார். அவர் உதட்டில் ஏளனமான சிரிப்பு நடமாடியது. அவன் மீண்டும் ஒரு முறை வீட்டை சுற்றி வந்தான். வேலைகாரர்கள், காஸ் சிலிண்டர் போட வருபவர்கள் என வெளி ஆட்கள் வந்து செல்ல இந்த மாதிரி வீடுகளில் பின்புறத்தில் ஒரு சின்ன கேட் இருக்குமென்று அவனுக்கு தோன்றியது. தேடிப்பார்த்தான். இல்லை. அவன் உள்ளங்கையில் வேர்க்க துவங்கியது. கால்கள் நடுங்கின. மீண்டும் ஒரு முறை வீட்டை சுற்றி வந்தான். வழியேதும் கிடைக்காததால் சப்-இன்ஸ்பெக்டரிடம் சென்று “ஒரே வழி. தூங்குற வாட்ச்மேன் கழுத்த உடச்சுட்டு அழகா மெயின் கேட் வழியாவே உள்ள போறதுதான் சார்.”

“என்ன நக்கலா? நீ சொன்னது என்ன? எந்த வீடா இருந்தாலும் வீட்டு வாசல தொடாம உள்ள போய்டுவேன்னு. மூணுல ஒரு வீடு உன்னால நுழைய முடியல. உன்ன விட திறமையான ஆளுங்க டிபார்ட்மெண்ட்லயே இருக்காங்க. நான் இருக்க நெலமைல அந்த திருட்டு கும்பல புடிக்க எந்த வழி கெடச்சாலும் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன். நீ என்னடானா வாட்ச்மேன் கழுத்த ஒடக்கனும்கிற. அடிச்சு உன்னையும் அந்த கும்பலோட உள்ள தூக்கி வைக்கணும் போல இருக்கே.” சப்-இன்ஸ்பெக்டர் விரக்தியில் சீறினார்.

“சார், எனக்கு இத விட்டா வேற எதுவும் தெரியாது சார். இந்த தெறமைய வெச்சு ஒன்னு திருடன் ஆகணும் இல்ல உங்கள மாதிரி ஆட்களுக்கு உதவி செய்யனும். உங்கள தேடி வந்தா நீங்களே என்னை உள்ள வெப்பேன்னு சொன்னா நான் என்ன சார் பண்ணட்டும்.”

“உன்ன நம்பி எனக்கு இவ்ளோ நேரம் டயம் வேஸ்ட். அடி வாங்கிக்காம அமைதியா போயிரு.”அவன் பாவமாக அழாத குறையாக கெஞ்சினான்,

“சார். இன்னும் ஒரே ஒரு வீடு. கடைசியா. கேக்குறேன்னு தப்பா நெனைக்க வேணாம். நீங்க அந்த கும்பல புடிப்பென்னு டிவி, பேப்பர்ல எல்லாம் பேட்டி கொடுத்தீங்க. உங்க வீட்டையே அவங்க ஆட்டைய போட்டுட்டா? நீங்க உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. எப்டி உள்ள ஏறுவாங்கனு கரெக்ட்டா சொல்லிடறேன். உங்க வீட்ட சேப்ப்டி பண்ணிறலாம்.”

“…தா. என்ன கொழுப்பா? எல்லாம் எங்களுக்கு தெரியும், நீ பொத்திக்கிட்டு வண்டில ஏறு. பஸ் ஸ்டாப்ல இறக்கி விடறேன் அடி வாங்காம வீடு போய் சேரு.” அவன் ஏறுவதற்குள் சப்-இன்ஸ்பெக்டர் கோபமாக ஜீப்பை ஸ்டார்ட் செய்தார்.

ஜீப்பின் பின் சீட்டில் ஏறிக்கொண்டு அவன் மீண்டும் கெஞ்சினான், “சார். தயவுசெஞ்சு இன்பார்மரா சேர்த்துக்கோங்க சார்.”

சப்-இன்ஸ்பெக்டர் பதிலேதும் சொல்லாமல் இருக்கவே அவன் மெல்ல தொடங்கினான், “எல்லா கும்பலுக்கும் நாலு டைப் ஆளுங்க தேவை சார். கும்பல்ல எத்தன பேரு வேணா இருக்கலாம். ஆனா நாலு பேரு முக்கியம்.” சப்-இன்ஸ்பெக்டர் ஜீப்பின் வேகத்தை குறைத்தார். சாலையில் இருந்து கவனத்தை விளக்காமல் அவன் சொல்வதை கூர்ந்து கவனித்தார்.

“திருட்டு கும்பல்களுக்குனே ஒரு பாஷை இருக்கு- சாவி, கட்ட, பல்லினு சொல்லுவாங்க. சாவி எந்த வித பூட்டா இருந்தாலும் ஓடைச்சுருவான். பூட்டு ஓடைக்குறவன் உங்களுக்கே தெரியும் எவ்ளோ முக்கியம்னு. கட்ட ஒரு தடியன்…மத்தவங்கள தூக்கி விடவோ இல்ல பிரெச்சனனு வந்தா சமாளிக்க ரொம்ப முக்கியம்…பல்லி எவ்வளவு உயராமான இடம்னாலும் ஏறிருவான்… இப்போ இருக்க அபார்ட்மென்ட் எல்லாம் கும்பல்ல ஒரு பல்லி இல்லாம ஒன்னும் பண்ண முடியாது சார்.” ஜீப்பின் வேகம் இன்னும் குறைந்தது. “இப்போ, நீங்க காமிச்ச முதல் வீட்ட பூட்ட ஒடச்சு கொள்ளையடிக்க ஒரு “சாவி” வேணும். ரெண்டாவதா போன அபார்ட்மென்ட்க்கு ஏறுற “பல்லி” வேணும். அந்த பங்களா பார்த்தோம் இல்ல சார், அதுல “கட்ட” ஒருத்தன் இல்லாம உள்ள போக முடியாது” என்று அவன் சொல்லி முடித்தான்.“எல்லாம் சரி. நாலு பேருனு சொன்ன. அந்த நாலாவது ஆள் யாரு?” என்று கேட்டபடியே ஒரு இருட்டான தெருவுக்குள் ஜீப்பை திருப்பினர் சப்-இன்ஸ்பெக்டர். “அவன்தான் சார் ரொம்ப முக்கியாமான ஆளு. சீட்டு கட்டு ஜோக்கர் மாதிரி. எல்லா கும்பல்லையும் அவன்தான் மூல. எந்த வீடு காலியா இருக்குனு பாக்குறதுக்கு, பதுக்கி வெச்ச அயிட்டங்கள அடுத்த நாள் சாதாரண ஆளு மாதிரி போய் எடுக்கறதுக்குனு எல்லாத்துக்குமே அவன்தான் முக்கியம். எந்த வேலையும் செய்ய தெரியலனாலும் பேசியே எல்லாம் தெரியும்னு நம்ப வெச்சுருவான். திருடங்களுக்குள்ள அதுக்கு பேரு பட்டாணி போடறதுன்னு சொல்லுவாங்க.”

“அடேயப்பா. இவ்ளோ தெரிஞ்சு வெச்சுருக்க” என சப்-இன்ஸ்பெக்டர் சொல்லும்போதே அந்த இருண்ட தெருவில் மூன்று பேர் ஜீப்பை நோக்கி ஓடி வருவதை கவனித்தார். விருட்டென பிரேக் அடிக்க கிரீச்சிட்டு நின்றது அந்த ஜீப். பிரேக் அடித்த வேகத்தில் பின் சீட்டில் இருந்தவன் முன் சீட்டின் மீது தூக்கியெறியப்பட, அவன் சட்டென சப்-இன்ஸ்பெக்டரின் கழுத்தை இறுக்கி பிடித்தான். “சொன்னேன் இல்ல சார். இதோ அந்த மூணு பேரு, சாவி, கட்ட, பல்லி…” என்று சிரித்த படியே கழுத்தை இன்னும் நெறுக்கி அழுத்தினான். எதிர்க்க நடந்து வந்த “கட்ட” தடியன், சப்-இன்ஸ்பெக்டர் ஏதோ நுரையால் செய்த சிலைபோல் அலேக்காக இழுத்து ரோட்டில் வீசினான். அவர் கைகளை பின்னே இணைத்து அந்த தடியன் கட்டிக்கொண்டிருக்க, ஜீப்பின் பின் சீட்டிலிருந்து அவன் கீழே இறங்கி மற்ற இரண்டு பேரிடமும் கூறினான், “மூணு வீடுங்க. தப்பிக்க இந்த ஜீப். உங்க மூணு பேருக்கும் இன்னைக்கு நைட் வேலை இருக்கு. நைட்டோட நைட்டா ஊர காலி பண்றோம்.”

திமிறிக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரின் வாயில் துணியை வைத்து தினித்துக்கொண்டிருந்த தடியனிடம் திரும்பி, “டேய், முக்கியமா சப்-இன்ஸ்பெக்டர் சார் வீட்டு சாவிய மறந்துறாத. அவர் பாண்ட் பாக்கெட்ல இருக்கும்.” என்று சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தபடியே அவர் கண்ணை பார்த்தான். “யோவ் இன்ஸ்பெக்டரு, அந்த  நாலாவது ஆளுக்கு பசங்க வெச்ச பேரு என்ன தெரியுமா? நரி…” என்றான் கிளம்பிய ஜீப்பின் பின்சீட்டில் குதித்தேரியபடியே.