குற்றப்பரம்பரை – நாவல் விமர்சனம்


வேல ராமமூர்த்தி அவர்கள் எழுதிய குற்றப்பரம்பரை நாவலை பல பரிமாணங்களில் ஆய்ந்திட முடியும் –  ஆங்கிலேயர்களின் ஒடுக்குமுறைகளை விமர்சிக்கும் ஒரு சரித்திரம் தழுவிய நாவலாக, ஒரு சாதியின் வரலாற்று பதிவாக, சாதிச்சண்டைகளை சுயலாபத்திற்காக மூட்டிவிடும் சில கொடிய மக்களின் விமர்சனமாக, வைரங்களைத் தேடி அலையும் ஒரு மந்திரவாதியின் கதையாக, பிறப்பிற்கும் வளர்ப்பிக்கும் இடையே ஊஞ்சலாடும் தவிப்பின் பதிவாக – இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த நாவலின் சிறப்பம்சம், வீழ்ச்சி இரண்டும் ஒன்றே – ஒரே நாவல் பல விஷயங்களை தன்னில் அடக்க முயற்சித்தது.

இந்த விமர்சனம் ஒரு பரிமாணம் பற்றியது மட்டுமே. கதை சொல்லும் நாவலாக எப்படி இருக்கிறது குற்றப்பரம்பரை?

1920 களில் நடக்கும் இந்த கதையில், கள்ளர் இனத்தின் பழக்க வழக்கங்களையும், அவர்கள் படும் இன்னல்களையும் வேயன்னா மற்றும் அவரின் கொம்பூதி கூட்டத்தின் மூலம் மிக அருமையாக பதிவு செய்கிறார் வேல ராமமூர்த்தி.

வேயன்னா, சேது, வையத்துரை போன்ற கதாபாத்திரங்களின் படைப்பு மிகவும் ரசிக்கும்படியாக உள்ளன. கதை நெடுகே கள்ளரின் வாழ்வியலை மிக உன்னிப்பாக பிரதிபலிக்கும் வண்ணமும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.

சில சிறப்பம்சங்கள் இருந்தும், முழு நாவலாக பார்த்தால் குற்றப்பரம்பரை சற்றே ஏமாற்றத்தை தருகிறது. திரைப்படமாகும் செய்திகள் மூலம் இந்த நாவல் பிரபலமடைந்தது இதற்கு பெரிய காரணம்.

வஜ்ராயினி எனும் பாத்திரத்தின் கிளைக்கதை மூலக்கதையுடன் கொஞ்சமும் பொருந்வில்லை. ஒரு இடத்தில் நடக்கும் சம்பவங்கள் முடியும் முன்னரே வேறெங்கோ பயணிக்கும் கதைப்போக்கு நடையை இடையிடையே தாமதிக்கச் செய்கிறது. 

வேறு இடத்தில் வளர்ந்து திரும்பும் வேயன்னாவின் மகன் சேது தன் பணிக்கும் பாசத்திற்கும் இடையே படும் மன உளைச்சலை ஓர் உவமையாக இன்னும் விரிவாக மெருகேற்றி இருக்கலாம்.

கதை நெடுக போடப்பட்ட பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் சற்றே அவசர கதியாக முடிகிறது இந்த நாவல்.

குற்றப்பரம்பரை நாவல் பிரபலமான அளவிற்கு அதன் கதை ஈடு குடுக்கவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

தருமியும் சொக்கனும்

தருமி மெல்ல நடந்தபடியே சொக்கனிடம் கேட்டான்…

“கனவுகளை வெறுப்பவன் யாரோ?”
“தூக்கம் இழந்தவன்.”

“பயம் இல்லாதவன் யார்?”
“மதி இழந்தவன்.”

“கவலைகள் இழந்தவன் யார்?”
“வயது இல்லாதவன்.”

தருமி சற்றே தாமதிக்க, சொக்கன் பெரிதாக நகைத்தான்.

தருமி தொடர்ந்தான்…

“தொடர்ந்தும் முடிவது?”

“வாழ்க்கையும் ஆன்மாவும்.”


“முடிந்ததும் தொடர்வது?”
“பசியும் பிரமஞ்சமும்.”

“சென்றும் திரும்புவது?”
“சூரியனும் சிரிப்பும்.”

“மொழியின் அழகு?”
“மௌனத்தில்.”

“கவிதையின் அழகு?”
“பொருளில்.”

“கதையின் அழகு?”
“முடிவில்.”


இருவரும் கைலாயம் நோக்கி நடந்தனர்.

அற்பச் சிதறல்

பிரபஞ்சம் படைத்த ஒருவனோ (ஒருத்தியோ)
வானும் மண்ணும்
கவியும் அழகும்
நதியும் கடலும்
தீட்டிக்கொண்டிருக்க…

இடை இடையே
வண்ணக் குழம்பில் நனைந்த தூரிகைக்கோல் உதற உதற
மாந்தர் முளைத்தனர்…
முளைத்துத் தழைத்தனர்…

வானும் மண்ணும் நமதே
கவியும் அழகும் நமக்கே
நதியும் கடலும் கூட நமதே
என கெக்கலித்து வழிந்தன

அழகிய சித்திரம் சிதைத்த
அற்பச் சிதறல் துளிகள்.

நிலம் பூத்து மலர்ந்த நாள் – நாவல் விமர்சனம்


மனோஜ் குரூர் அவர்களால் மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த நாவல், தமிழில் கே. வி. ஜெயஸ்ரீ அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.


சங்கத் தமிழ் இலக்கியம் பற்றியும் ஐந்திணை நிலபரப்புகள் பற்றியும் ஆன்லைன் தமிழ் பல்கலைகழகம் வலைதளத்தில் படித்து கொண்டிருந்தபோது, தற்செயலாக இந்த நாவல் பற்றி தெரியவந்தது.

எங்கு தேடியும் கிடைக்காமல் போக, கடைசியாக நாவலை வெளியிட்ட வம்சி புக்ஸ் அலுவலகத்தை தொலைபேசியில் அழைத்தேன். மிகத் துரிதமாக கூரியர் மூலம் அனுப்பி வைத்தார்கள்.


நாவலின் கதைக்களம் பதினேழு நூற்றாண்டுகள் முன்பான தமிழகம். சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் பெரும் ஆட்சி புரிகின்றனர். நன்னன், பாரி, அதியமான் போன்ற குறுநில மன்னர்கள் தங்கள் புகழ் பாடுவோற்க்கு பொன்னும் பொருளும் வழங்கும் வள்ளல்களாக பெருமை கொண்டுள்ளனர்.

இதை அறிந்த பாணரும் கூத்தரும்  மன்னர்களை பார்த்து தங்கள் வறுமையைப் போக்க குடும்பங்களுடன் புறப்படுகிறார்.

பல வருடங்கள் முன்பு ஓடிப்போன தன் மகன் மயிலனை எங்கோ சந்திக்கக்கூடும் என்ற நம்பிக்கையுடன் கொழும்பனும் அவனின் மற்ற பிள்ளைகளும் செல்கின்றனர்.

மூன்று பாகங்களாக விரியும் கதை, கொழும்பன், மகள் சித்திரை, மகன் மயிலன் என்று மூன்று கண்ணோட்டங்களில் சொல்லபடுகிறது.

மலைகளில் இருந்து நகரும் கூட்டம் வெவ்வேறு நிலப் பரப்புகளை கடக்கும்பொழுது அந்தந்த நிலத்தின் பூக்களும், வாசனைகளும், மரங்களும், மக்களும், சங்க இலக்கிய பாடல்களில் சொல்லப்பட்டது போல மிக அழகாக காட்சிப் படுத்துகிறார் மனோஜ்.

வேடர், உழவர், பரதவர் என பலதரப்பட்ட மக்களையும் அவர்களின் விருந்தோம்பல், உணவுகள், குடில்கள் மட்டுமின்றி அவர்கள் வழிபடும் கோவில்களும் இறைவிகளும் கூட கண்முன்னே வருகின்றன. ஏறுதழுவல், கூத்தாடல் போன்ற வழக்கங்கள் எல்லாம்  துல்லியமாக காட்சிப் படுத்தியது ஆச்சர்யமாக உள்ளது.

மன்னர்கள் மட்டுமின்றி ஔவை கபிலன் போன்ற பெரும்புழவர்களும் கதையில் பெரும்பங்கு வகிக்கும் கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.


அதிரடியாக படைகள் போர் செய்யும் சரித்திர நாவல்கள் மட்டுமே படித்துப் பழகிய என் போன்றவர்களுக்கு இந்த கதை சற்றே பொறுமையிலக்க செய்யும் என்பது உண்மையே. ஆனால், மன்னர்கள் மத்தியில் இன்றி மக்களின் மத்தியில், ஆடிப்பாடி, உண்டு, இளைப்பாறி நாமே சங்க தமிழ்நாட்டில் பயணம் செய்த களிப்பை வேறெந்த நாவெளிலும் நான் இதுவரை கண்டதில்லை. 

நாவலின் தலைப்பு போலவே கதையும், கடந்து செல்லும் நிலங்களும் கவிதையே.

தமிழ் நிலம் அன்றும் இன்றும் என்றும் கவிதையே!

விசும்பு – விமர்சனம்

அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய அறிவியல் புனைகதைகள் தொகுப்பான “விசும்பு” படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் எழுதப்பட்ட சயின்ஸ் பிக்ஸன் கதைகளை தேடிச்சென்ற போது எதேர்ச்சையாக கண்ணில் தென்பட்ட மற்றுமோர் புத்தகம் இது. ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம், கொற்றவை போன்ற மற்ற நாவ்ல்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டு, எனவே உடனே விசும்பு வாங்கிப் படித்தேன். அசந்து போனேன் என்று சொல்வது சற்றும் மிகையாகாது.

விசும்பு ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ள நிகழ்கால சித்தர் ஒருவரைத் தேடி செல்லும் விஞ்ஞானிகள் பற்றிய முதல் கதையில் இருந்ததே ஆச்சரியங்களும் நம்மை புரட்டிப்போடும் கற்பனையும் தொடங்குகின்றன. இங்கிருந்து வேற்றுகிரக விண்கல், மூளைத்தூண்டிகள் (Cognitive Enhancers), ரசவாதம் (Alchemy), மனப்பிளவுப் பிரமைநிலை (Schizophrenia), அணு ஆயுதப் போர் என்று பின்வரும் கதைகளின் கருக்களும் களங்களும் பிரமிப்பின் உச்சம்.

பற்பல அறிவியல் கருத்துக்களை கையாளும் போது கதைகளில் நடையில் சற்றே தோய்வு ஏற்படும். இந்த விதிக்கு விலக்கு என்று இந்நாள் வரை சுஜாதா அவர்கள் மட்டுமே என்று அடியேனின் எண்ணம். இப்போது அந்த பட்டியலில் ஜெயமோகன் அவர்களும் கண்டிப்பாக உண்டு. எந்த ஒரு கதைலயிலும் பரபரப்புக்கும் குறைவில்லை, அதே சமயம் அறிவியல் கருத்துக்களுக்கும் ஆழமாக விவாதிக்கப் பட்டுள்ளது.

இந்த தொகுப்பின் மற்றுமொரு சிறப்பம்சம் கதைகளின் “இந்தியத்தனம்”. பொதுவாக தமிழில் சயின்ஸ் பிக்ஸன் கதைகள், மேற்கத்திய அம்சங்களுடன் நம் ஊரில் நடக்கும் கதைகளாகவே இருந்தன. ஜெயமோகனின் விசும்பு சிறுகதைகள் எல்லாமே நம் ஊரில் மட்டுமே நடக்ககூடிய கதைகள். கதைகளின் அறிவியலும் அவ்வண்ணமே. மற்ற சயின்ஸ் பிக்ஸன் கதைகள் போல இவற்றின் களங்களை மாற்றுவது என்பது இயலாத ஒன்று.

2.0 படத்தின் பட்சிராஜன் கதாபாத்திரத்தின் மூளைக்கதை தான் ‘விசும்பு’ என்ற சிறுகதை. இந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே இந்த தொகுப்பை வாங்கி படிக்கலாம் என்று சொல்வேன்.

தொகுப்பின் கடைசியில் வருங்கால (பல நூற்றாண்டுகள் பின்) இலக்கியங்களும் அதன் வடிவங்களும் எப்படி இருக்கக்கூடும் என்று ஜெயமோகன் அவர்கள் சித்தரிக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது. இப்போது பிரபலமாக விவாதிக்கப்படும் “பிரைன் கம்ப்யூட்டர் இன்டெர்பேஸ்” (BCI) மூலம் வருங்காலத்தில் நம் முலைகளும், எண்ணங்களும், கதைகளும், இலக்கியங்கலும் எப்படி இணைந்துபோகும் என்று ஒரு எண்ணம் வரைகிறார்.

சுஜாதா அவர்கள் அன்றி தமிழ் சயின்ஸ் பிக்ஸன் கதைகளில் அநாயசமாக பட்டையை கிளப்பும் ஒருவர் உள்ளார். அவரின் அருமையான இந்த படைப்பின் முதல் பக்கம் கீழே புகைப்படத்தில். என்ன பொருத்தம்!

IMG_20191123_215950.jpg

ப்ராஜக்ட் ‘ஃ’ – நாவல் விமர்சனம்


கவா கம்ஸ் எழுதிய ப்ராஜக்ட் ‘ஃ’ நாவலை நான் படிக்கத் தொடங்கியது முற்றிலும் தற்செயலே. தமிழில் எழுதப்பட்ட அறிவியல் சிறுகதைகளை தேடி புத்தகக்கடைக்கு சென்றிருந்த போது தலைப்பை பார்த்து இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். ஆச்சர்யமூட்டும் கதைச்சுருக்கம், “விரைவில் வெள்ளித்திரையில்”, எழுத்தாளரின் விசித்திரமான புனைப்பெயர் என்று பல விஷயங்கள் கவர்ந்தன. உடனே வாங்கினேன். படித்தும் முடித்தேன்.

நாவலின் ஹீரோ அகில் மற்றும் அவன் நண்பர்கள் ஒரு புதையலை தேடி செல்கிறார்கள். அகிலின் தாத்தா அவனுக்கு விட்டுச்சென்ற தடயங்களும், மர்மமான செய்தியுடைய ஒரு கடிதம் மட்டுமே அவர்களிடம் உள்ளது. ஃபோனில் அவ்வபோது வரும் மர்ம நபர்களின் மிரட்டல்கள், ‘ழகரம்’ என்னும் ரகசிய அமைப்பின் ஆட்கள் என அகிலின் தேடல் சுவாரஸ்யமாகவே செல்கிறது.

புதையலை தேடி அகில் அண்ட் கோ செல்லும் இடங்கள் எல்லாம் மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ளது. சித்தன்னவாசல் ஓவியங்கள் போன்ற விஷயங்களை கவா கம்ஸ் கூர்ந்து ஆராய்ந்து எழுதியுள்ளது பாராட்டுக்குரியது. மகாபாரதம், குர்ஆன், பைபிள் வாசகங்களில் ஒழிந்துள்ள தடயங்கள் எல்லாம் தெளிவாகும் இடங்கள் மிக அருமை. தேடிச்செல்லும் புதையல் கூட மிகவும் அருமையான கற்பனை.

இடையிடையே அகிலின் நண்பர்கள் “காமெடி” செய்ய முயல்வதும், சமயங்களில் சிறுபிள்ளைத்தனமான தடையங்களும் நம் கவனத்தை உடைக்கின்றன.

சிறு குறைகளை தவிர்த்தால் இந்த ப்ராஜக்ட் ‘ஃ’ தமிழில் எழுதப்பட்ட Dan Brown நாவல் என்றே சொல்லலாம்.

ப்ராஜக்ட் ‘ஃ’ இப்போது “ழகரம்” என்ற திரைப்படமாக வெளியாகியுள்ளது. வெறும் 10 லட்சம் பொருட்செலவில் படமாக்கியுள்ளார்கள். கண்டிப்பாக தோல் தட்டி பாராட்டுகள் சொல்லலாம்.

வளரி (சிறுகதை)

தமிழில் மொழிபெயர்த்து முழுவடிவம் தந்தமைக்கு நன்றி ருபக்ராம்.

வளரி தமிழர்களின் ஒரு உன்னத ஆயுதம். அதை பற்றி மேலும் அறிய ஆவல் உள்ளவர்கள் இந்த காணொளியை காணலாம்.

இனி சிறுகதை…

“யுத்ததேவன் பூமியை ஆட்கொண்டிருந்த காலம் அது. ஆடவர் போரில் சண்டையிட்டு, உணவு உண்டு, மது அருந்தி, உறங்கி, விழித்து மீண்டும்  போருக்கு சென்று சண்டையிடுவதையே தம் குலத் தொழிலாக கொண்டிருந்த அந்தக் காலத்தில், பெண்கள் வீட்டில் இருந்து குழந்தைகளைப் பெற்று வளர்த்து, அவர்களை வீரர்களாகவும் அரசர்களாகவும் மாற்றினர். இன்னும் சில வீர தமிழ் பெண்மணியினர்  தங்கள் தந்தையினரும், தமயர்களும், கணவன்மார்களும், மகன்களும் போர்களத்தில் தினந்தோறும் செத்துமடிய; உள்நாட்டில் சதிசெய்து மன்னர் இல்லாத நாட்டை சூறையாட நினைத்த கயவர்களிடமிருந்து நாட்டை காத்தனர்.

ஒரு வெப்பமான கோடைக்காலத்தின் மாலைப் பொழுதில் ராமநாதபுரத்தின் வீதிகளின் வழியே நிதி அமைச்சர் தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் நடையில் ஒருவித அவசரம் தெரிந்தது.

தலைநகரில் வசித்தவர்களுக்கு போர் எங்கோ ஒரு தூர தேசத்தில் நடப்பது போன்ற உணர்வு இருந்தது. போரின் எதிரொலி அந்த நகர வீதிகளில் காணப்படவில்லை. இருப்பினும் போரின் விளைவுகள் மேல் தட்டு அரசியலில் தென்படத் தொடங்கியிருந்தன.

அமைச்சர் கடைத்தெருவில் இருந்த ஒரு சிறிய கடை முன் நின்று, தேன் மற்றும் ம ல்லிகைப் பூ வாங்கினார். போரினால் நான்கு மடங்கு விலை அதிகரித்துஇருந்ததை அவர்  பொருட்படுத்தாமல் கூடுதலாக ஒரு நாணயத்தை அந்த மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு,  மீண்டும் நடக்கத் தொடங்கினார்.

அவர் சென்றவுடன், அந்த மூதாட்டி ஒரு பழைய கோணிப் பையால் தன் கடையை மூடி விட்டு, கடைத் தெருவின் எதிர் திசையில் நடந்தாள். அவளின் ஒரே மகன் போர்க் காயங்களால் கை கால் செயலற்று, குருடாகி வீட்டில் இருந்தான். அவள் பதினேழு வயது பேரனோ போர் முனையில் அவன் தந்தையின் இடத்தில் இருந்து, ராமநாதபுரத்தின் வீரப் புகழைநிலை நாட்ட போராடிக்கொண்டிருந்தான்.

வேகமாக கடைத்தெருவை கடந்த அமைச்சர், ஒரு குறுக்குச் சந்தில் திரும்பினார். சாதாரண நாளில் ராமநாதபுரத்தின் நிதி அமைச்சர் வீதிகளில் தனியாக நடந்து செல்வது அதிசயக்காட்சியாக இருந்திருக்கும். ஏனெனில் அவரது மெய்க்காப்பாளர்கள் அவரை ஒரு அடி கூட தனியாக விடுவதில்லை. யுத்தமானது இயல்பு வாழ்கையை விழுங்கி நாடெங்கும் ஒரு குழப்பமான நிலையை நிலவச் செய்திருந்தது. அவரது மெய்க்காப்பாளர்களை சில தெருக்கள் தள்ளி இருக்கும் கள்ளுக் கடையில் சில மணி நேரம் காத்திருக்க ஆணையிட்டிருந்தார். அவர்களும் அவரது ஆணைக்கு அடிப்பணிந்து  அந்தக் கள்ளுக் கடையில் காத்துக்கொண்டிருந்தனர். அமைச்சர் ஒடுக்கமான பாதையில் திரும்பி நடந்தார். அந்தப் பாதை சற்று இருட்டாக  இருக்கவே குழிகளிளும் சாணத்திலும் சிக்காமல் கவனமாக நடந்து அந்தப்  பாதையின் முடிவில் இருந்த ஒரு வீட்டின் வாசலை அடைந்தார். வீட்டின் மரக் கதவை குறிப்பிட்ட சில இடைவெளியுடன் மூன்று  முறைத் தட்டி, அந்தக்  கதவு திறக்க காத்திருந்தார்…


***
முப்பது நாட்களாக யுத்த களத்தில் சண்டை புரிந்த அந்த வாலிபன் தனது வலது கை பெறு விரலை இழந்திருந்தான். மேலும் அவன் கால் விரல்கள் குதிரைக்குளம்பில் நசுக்கப்பட்டு காயமடைந்திருந்தன. எதிரியின் வாள்வீச்சில் தனது ஒரு காதை இழக்காமல் மயிர் இழையில் தப்பியிருந்தான். இருப்பினும், துணியால் தன் காயங்களைக் கட்டிக் கொண்டு, போர்க்களத்தில் எதிரி நாட்டு வீரர்களை பந்தாடிக்கொண்டிருந்தான்.  தன் உடலில் இருந்து வியர்வை,  ரத்தம் என எது வடிந்த பொழுதும் அவன் சண்டையை நிறுத்துவதாய் இல்லை. எதையும் பொருட்படுத்தாமல் போர் புரிந்த அந்த வாலிபன் யுத்தகளத்தில் ராமநாதபுரத்தின் மாவீரனாகவே காட்சியளித்தான். தன் தந்தையிடம் இருந்து, போர்க்கதைகள், அவரின் வீர சாகசங்கள், நாடு மற்றும் அரசன் மீது ஒரு குடிமகனுக்கு இருக்க வேண்டிய பற்று போன்றவற்றை கேட்டு வளர்ந்த அவனுக்கு சிறு வயதில் இருந்தே போர் மீது ஒரு காதல் இருந்தது. பல நூறு வீரர்களுடன், உடைந்த காலுடன் இருட்டில் தடுமாறி, கொசுக்கள் நிறைந்த  சதுப்பு நிலத்தில் மலம் கழிக்கும் பொழுது, எந்தக் கதையும் ஒரு வெற்றிக்குபின் இருந்த, முகம் தெரியாத பல ஆயிரக்கணக்கான வீரர்களின்  வலிகளைப் பற்றி சொல்வதில்லை என்று தன்னுள் எண்ணி வருந்தினான்.

அவன் தேச பக்தியே அவன் காயத்திற்கு மருந்து…

***


‘நீங்க இதை வாங்கி இருக்கக் கூடாது’ என்றது வளையல்களின் பின்னணி இசையுடன் ஒரு ரம்மியமான பெண்குரல்.

‘என்னிடம் இல்லாத செல்வமா?’ என்று கூறிக்கொண்டே அமைச்சர் தேனையும் மல்லிகையையும்  அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

‘இன்றைக்கு என்ன விலை?’ என்று அவள்  தினமும் கேட்பதுபோலவே இன்றும் கேட்க, அமைச்சர் காதில் விழுந்தது போல் காட்டிக்கொள்ளவில்லை.

‘நிதி அமைச்சர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ?’ என்று கேட்டாள் சிரித்தபடியே.

‘அமைச்சரா?… மஹும்… இன்னும் சில நாட்களில் ராமநாதபுரத்தின் அரசன் நான்’ என்று பெருமையாக சிரித்தார்.

‘இதென்ன புதுக்கதை? என்னிடம் எதையும் நீங்கள் முழுசாக சொல்வதேயில்லை ‘ என்று சலித்துக் கொண்டாள்.

‘என்னுடைய வருங்கால அரசிக்கு கோவமா? இதோ சொல்கிறேன் கேள். அரசன் போருக்கு சென்றவுடன், வடதேசத்துபடையில் இருந்து சில வீரர்களை விலை கொடுத்து வாங்குவேன். அவர்களை போர்க்களத்திற்கு அனுப்பி, அரசனைக் கொன்று, எதிர்க்கும் அரசர்களுக்கு பெருமளவு கப்பம் கட்டி, ராமநாதபுரத்தின் மன்னனாக முடிசூடிக் கொள்ளப்போகிறேன்’, அமைச்சரின் முகத்தில் அந்தக் கணம் ஒரு கொடிய நாகத்தின் சீற்றம் இருந்தது. ‘இதற்கு பலிகடா யார்? மக்கள். வரிகட்டி, தந்தைகளையும் தமயன்களையும் போருக்கு அனுப்பி, எனக்காக சண்டையிடும் மக்கள்’.

‘மக்களுக்கு உண்மை தெரிந்தால்?’ என்று பயத்துடன் கேட்டாள் அவள்.

‘அரசனை எதிர்த்து மக்களால் என்ன செய்ய முடியும்’ என்று சொல்லி  ஏளனமாக சிரித்தான்.

***

அன்று இரவு அந்த வாலிபன் தன் கூடாரத்திற்கு திரும்புகையில், காட்டின் முனையில் குதிரைகள் வரும் சலசலப்பு கேட்டது. ஒரு வீரனின் வீட்டில் வளர்ந்த அந்த வாலிபனால் ராமநாதபுரத்து குதிரைகள் எந்த தூரத்தில் இருந்து  வந்தாலும் சரியாக கணித்து விடுமுடியும். இந்த சத்தம் ராமநாதபுரத்து குதிரைகளுடையது அல்ல என்பது அவனால் நிச்சயம் உணர முடிந்தது. அவை வடதேசத்துப் படைக் குதிரைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று  தீர்மானித்தான். சுதாரித்துக் கொண்டு ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். குதிரைகள் நெருங்கி  வர வர, அந்த சத்தத்தின் எதிர் திசையை நோக்கினான். வீரர்களின்  கூடாரத்திற்கு பின்னே இருந்த ராஜாவின் கூடாரம், பௌர்ணமி  நிலவொளியில்  தனியாக தெரிந்தது. ஆபத்தை உணர்ந்து ‘ராஜாவிற்கு ஆபத்து’ என உரக்க கத்திக் கொண்டு, அரச கூடாரத்தை நோக்கி ஒற்றைக் காலை நொண்டிக்கொண்டு ஓடினான். அதற்குள் கறுப்புக் குதிரையில் வந்த சுமார் நாற்பது வீரர்கள் அரசனின் கூடாரத்தை நெருங்கிவிட்டனர்.

அந்த வடக்கு வீரர்கள் குதிரையில் இருந்து இறங்கி தங்கள் வாள்களையும் வேல்களையும் கையில் உயர்த்திப் பிடித்தனர். அரச கூடாரத்தின் வாயிலில் நின்ற அந்த வாலிபன் மேல் எறியப்பட்ட வேல், அவன் வலது தோளை உறசிச் சென்று கூடாரத்தின் துணியைக் கிழித்தது. வாலிபனின் கூச்சல் சத்தத்தால் விழித்த மற்ற வீரர்கள் ஆயுதங்களுடன் அரச கூடாரத்தை நோக்கி விரைந்தனர்.

வடக்கு வீரர்கள் தன்னை நோக்கி முன்னேற, மற்ற வீரர்கள் அரசனை காக்க கீழே இருந்து ஓடி வர, அரசர் கூடாரத்தை விட்டு வெளியே வருவதையும், அவர் கையில் ஆயுதம் ஏதும் இல்லாததையும் அந்த வாலிபன் கண்டான். 

வடக்கு வீரர்கள் மற்ற வீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அந்த வாலிபன் கூடாரத்தின்  வாயிலில் அரசரை பாதுகாக்க விரைந்தான். வடக்கர்கள் எப்பொழுதும் வஞ்சகமாக வெல்பவர்கள் என்பதால் இருட்டில் நாலாப் புறமும் விழிப்புடன் நோக்கியபடியே சிதைந்த கால்விரல்களுடன் சிரமப்பட்டு ஓடினான். நிலவை மேகம் மறைக்க, எங்கும் இருள் சூழ கூடாரத்தின் மற்ற முனையில் இருந்து தாடியுடன் ஒரு வீரன் மெதுவாக அரசரை நெருங்வதை கவனித்தான்…

***


மறுநாள் மாலை அதேக் கடையில் பூக்களை வாங்கிய அமைச்சர், காசு கொடுக்க முயலும் பொழுது, அந்த மூதாட்டி காசு வாங்க மறுத்தாள். ‘போரில் துயரப் படும் நம் வீரர்களுக்கு நான் கொடுக்கும் காணிக்கையாக  இதை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு அமைச்சர் சென்றவுடன்  தன் கடையை மூடத் தொடங்கினாள்.

அமைச்சர் கடைத்தெரு வழியே  அந்தக் குறுக்கு வீதியில் சென்று, ஒடுக்கமான பாதையில் இருக்கும் அந்த வீட்டை அடைந்தார். கதவை மூன்று முறை தட்டினார். அவரை பின்தொடர்ந்து வந்த மூதாட்டி எதிரில் இருந்த ஒரு புதரில் மறைந்ததை அவர் கவனிக்கவில்லை. கதவு திறந்தது.

‘இன்றைக்கு என்ன விலை கொடுத்து வாங்கினீர்?’ என்று கேட்டது அந்த பெண்ணின் குரல், வசீகர சிரிப்புடன்.

‘இன்று இலவசம்’ என்றார் அமைச்சார்.

‘அப்படியா!’ என்று அமைச்சரை நிமிர்ந்து பார்த்தவள், தன் பின் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தாள். அந்த கத்தி மின்னியதைக் கண்டஅமைச்சர், சுதாரித்து பின்வாங்க, கத்தி அவர் மார்பில் பாய்ந்தது. வாசற்கதவு சட்டத்தில் இடறிய அமைச்சர், அடி பட்ட பன்றி போல் தெருவில் விழுந்தார். 

ஒரு நொடிப்பொழுதில் மாரில் செருகியிருந்த கத்தியை உருவி எறிந்துவிட்டு ஓடத் தொடங்கினார். புதரில் இருந்த மூதாட்டி தன் சேலை மறைவில் இருந்த வளரியை எடுத்த வலிமையுடம் வீசினாள். அந்த வளரி தெருவில் ஓடிக்கொண்டிருந்த அமைச்சரின் பின் மண்டையை பிளந்து, பின் சுழன்றுக்கொண்டே சற்றே தள்ளி விழுந்தது. மூதாட்டி அந்த வளரியை எடுத்து, தன் சேலை மடிப்பில்  வைத்துக்கொண்டு, அரண்மனையை நோக்கி வேகமாக நடந்தாள்…

***

அந்த வடதேசத்து வீரன் அரசரை நெருங்குவதைக் கண்ட வாலிபன், தன் ஆடையினுள் இருந்த வளரியை கையில் எடுத்துக் கொண்டு, சரியான தருணம் வர தயாராக காத்திருந்தான். அவன் வளரி இரும்பினால் செய்யப்பட்டு, ஒரு முனை பந்துபோல் உருண்டையாகவும் மறு முனை வாள் போல்கூர்மையாகவும் இருந்தது. வடதேசத்து வீரன் தன் வாளை நீட்டக்கொண்டு அரசரை நோக்கி முன்னேற, அந்த வீரவாலிபன் வளரியை வீசினான்.அந்த வளரி காற்றில் சில வினாடிகள் தங்கி, மீண்டும் வலது புறம் திரும்பி அரசரை நோக்கி வந்தது. வளரி தன்னை  நோக்கி வருவதைக் கண்ட அரசர், பதறி கீழே அமர, அந்த வளரி அரசரின் பின்னே நின்ற வடக்கு வீரனின் கழுத்தை துண்டித்தது. அமர்ந்தபடியே அந்த வடதேசத்து கொலைகாரன் முண்டமாக கீழே சரிந்து விழுவதை அதிர்ச்சியுடன் கண்டார் அரசர். மெய்க்காப்பாளர்கள் வந்து அரசரை சூழ, அந்த வாலிபன் தன் வளரியை எடுத்துக்கொண்டு வடக்கு வீரர்களுடன் போரிடச் சென்றான். அரசரின் படைவீரர்கள், சில நிமிடங்களில் அந்த வடக்கு வீரர்களை துவம்சம் செய்துவிட்டனர்.

இரண்டு நாட்களுக்கு பிறகு ராமநாதபுரத்து அரசியிடம் இருந்து அரசருக்கு
ஒற்றர் தலைவன் ஓர் ஓலை கொண்டு வந்தான்.

‘நிதி அமைச்சரின் சூழ்ச்சி அம்பலமானது. தக்க சமயத்தில் தலைநகரம் காப்பாற்றப்பட்டது. உங்களை வஞ்சகமாக தாக்க சில வடக்கு வீரர்களை ஏவியுள்ளார். கவனாமாக இருங்கள்.’
அரசர் ஓலை கொண்டு வந்த ஒற்றர் மூலம் அமைச்சரின் மரணம் குறித்த தகவல்களை கேட்டு அறிந்துகொண்டார். மெல்ல புன்னகைத்தார். 

போருக்கு ஆயத்தமான அரசர் தனது மெய்க்காப்பாளராக உங்கள் அப்பாவை நியமித்தார்…” என்று சொல்லி முடிக்கும் முன் கதை கூறிக்கொண்டிருந்த தான் தாய் மடியிலிருந்து, ‘வளரி…வளரி’ என்று கத்திக்கொண்டே கீழே குதித்தான் அந்த சிறுவன்.

‘அது என்னுடைய வளரி. திருப்பிகொடுடா’ என்று அவன் அண்ணன் அவனை துரத்தினான்.

‘பெரிய மருது, அவன் உன் தம்பிதானே சற்று நேரம் விளையாடட்டும் விடு. நீ இங்கு வந்து சாப்பிடு. நீ உண்ணாவிட்டால் அம்மா உனக்கு வளரி வீச சொல்லித் தர மாட்டேன்’ என்று கையில் சோற்றுக் கிண்ணதுடன் தன் மகன்களை பார்த்து சத்தமிட்டாள் அந்த வீரமான தமிழ் தாய்.